சினிமாவில் சாதி பார்க்கப்படுவதாக அறிமுக இயக்குனர் கிரண் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் கிரண் துரைராஜ் இயக்கத்தில், காதலனை ஆணவக் கொலை செய்த குடும்பத்தை பழிவாங்கும் பெண்ணின் கதையாக நவயுக கண்ணகி திரைப்படம் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இப்படத்தை கோமதி துரைராஜ் தயாரித்துள்ளார். மேலும் பவித்ரா தென்பாண்டியன், விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆல்வின் இசையமைத்துள்ளார். கெவின் படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் கிரண் துரைராஜ் பேசியது, நான் பெங்களூரில் பிறந்த தமிழன். நானும் ஒரு சாதியைச் சேர்ந்தவன் தான். பெங்களூரில் கன்னடன், தமிழன் என்ற வித்தியாசம் தான் இருக்கும். ஆனால் நான் சினிமாவிற்காக சென்னை வந்த பிறகு தான் சாதிய மனபாவத்தை அறிய தொடங்கினேன். சென்னையில் சாதி பார்க்கப்படவில்லை, ஆனால் சினிமாவில் சாதி பார்க்கப்படுகிறது.
5 நிமிடத்திலேயே நான் என்ன சாதி என்று போட்டு வாங்குவதைப் போல சினிமாவில் உள்ள சிலர் பேசத் தொடங்கினர். ஆனால் எனக்கும் சாதியை பற்றி கூற வேண்டுமா, வேண்டாமா என்று கூட தெரியாது. ஆனால் என் சாதியை கண்டுபிடித்த சிலர் அதன் பிறகு என்னை அந்த கோணத்திலேயே சித்தரிக்க தொடங்கினார்கள். இதுவே சாதிய மனோபகத்திற்கு எதிரான எனது கோபத்திற்கு காரணம். இதுவே சாதிய சிந்தனையை சித்தரிக்கும் செயலை எனது முதல் படமாக எடுக்க காரணம். எனது அடுத்த படங்களிலும் நிஜ வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு விஷயங்கள் இருக்கும் என்று கூறினார்.