

ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் ஒடிஸி என்ற கிரேக்க புராணக் கதையை படமாக்கி வருகிறார். ஆஸ்கர் விருது பெற்ற அவருக்கு இந்தியாவில் பெரியதொரு ரசிகர் கூட்டம் உள்ளது. சினிமா ரசிகர்கள் தங்களை பெரிய அறிவாளியாக காட்டிக் கொள்ள நோலனின் ரசிகர்கள் என்று சொல்வதுண்டு. அந்த அளவிற்கு அவர் திரைப்படத்தின் திரைக்கதையும் , படப்பிடிப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.
ஒரு சிலர் இவரது திரைப்படங்களை விரும்பிப் பார்த்தாலும் , அந்த திரைப்படங்களின் கதை புரியவில்லை என்பார்கள். இதற்காக பலமுறை சமூக வலைதளங்களில் கருத்து மோதல்களும் உள்ளது. இந்தியாவில் தனக்கு இருக்கும் புகழை தக்க வைக்கவும், தனது புதிய திரைப்படமான தி ஒடிஸி திரைப்படத்தின் பிரிமியர் ஷோவை முதன் முறையாக மும்பையில் திரையிட உள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வமான செய்தியை அந்த படத்தை தயாரிக்கும் யூனிவர்சல் பிக்சர் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி மும்பை , நியூயார்க் , பாரிஸ், லண்டன் உள்ளிட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பெருநகரங்களில் தி ஒடிஸி திரைப்படத்தின் முதன்மை காட்சிகள் திரையிடப்பட உள்ளன. கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படம் ஒன்று இந்தியாவில் பிரீமியர் காட்சி திரையிடப்படுவது இதுவே முதன்முறை.
இந்த நிகழ்ச்சி மும்பையில் நடைபெறும் பொழுது இயக்குனர் நோலன் , தயாரிப்பாளர் எம்மா தாமஸ் , நடிகர்கள் மாட் டேமன் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க இருக்கிறார்கள். இந்த திரையிடல் மும்பை ஃபீனிக்ஸ் பல்லேடியம் மாலில் உள்ள பிவிஆர் ஐகான் ஐமேக்ஸ் (PVR ICON IMAX) திரையரங்கில் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
கிரேக்க நாட்டின் புகழ்பெற்ற இலக்கியவாதி ஹோமர் எழுதிய காவியமான ஒடிஸி கதையை தழுவி தி ஒடிஸி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. காதல்,வீரம் , விவேகம், காத்திருப்பு, நாட்டுப்பற்று, துரோகம் உள்ளிட்ட அம்சங்களை கலந்து சுவாரசியம் மிகுந்த கதைக்களத்தை கொண்டது இந்த காவியம்.
ட்ராய் நகர் மீதான டிராஜன் எனும் கொடூரமான போர் முடிந்து உயிருடன் உள்ள கிரேக்க வீரர்கள் நாடு திரும்புகின்றனர். ஆனால் , அவர்களின் தலைவன் இத்தாக்கா நாட்டு மன்னன் ஒடிஸியஸ் மட்டும் நாடு திரும்ப வில்லை . அவன் போரில் இறந்து விட்டதாக கருதி மற்ற இளவரசர்கள் ஒடிஸியின் மனைவி பெனிலோப் மற்றும் மகன் டெலிமாக்கஸ் ஆகியோருக்கு துன்பம் விளைவிக்கின்றனர்.
உயிருடன் இருக்கும் ஒடிஸியஸ் தன் தாய் நாட்டிற்கு திரும்ப மேற்கொள்ளும் 10 ஆண்டுகால போராட்டமே இதன் கதையாகும். வழியில் பாலிபெமஸ் என்ற ஒற்றைக் கண் ராட்சசனிடம் ஒடிஸி மாட்டிக் கொள்கிறான். பின்னர் கடலை கடக்கும் போது கொலை செய்யும் கடல் கன்னிகளிடம் மாட்டிக் கொள்கிறான், ஒரு சூனியக்காரி அவனது வீரர்கள் பன்றிகளாக மாற்றிவிடுகிறாள்.
அவர்களை மீட்க முயலும் போது கலிப்ஸோ தேவதை ஒடிஸியசை 7 ஆண்டுகள் தனித்தீவில் சிறை வைக்கிறாள். இந்த நேரத்தில் ஒடிஸியசின் மனைவி பெனிலோப்பை திருமணம் பல நாட்டு அரசர்கள் முயல்கின்றனர். மிகவும் சுவாரசியமான இந்தக் கதையை தற்போது மிகப் பிரம்மாண்டமாக நோலன் உருவாக்கி உள்ளார்.
நாயகன் ஓடிசியாக மாட் டேமன் நடிக்கிறார், அவரது மனைவி பெனிலோப்பாக ஆன் ஹேத்வேயும், அவரது மகன் டெலிமாக்கஸாக டாம் ஹாலண்டும், இவர்களுடன் ராபர்ட் பேட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மார்டன், ஜெண்டாயா மற்றும் சார்லிஸ் தெரான் ஆகியோரும் நடித்துள்ளனர்.
நோலன் இந்த திரைப்படத்தில் கிரீன் ஸ்கிரீன் , கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இல்லாமல் , பண்டைய கிரேக்க நாட்டை செட்களாக அமைத்து தத்ரூபமாக படத்தினை உருவாக்கியுள்ளார். மேலும் முழுவதும் ஐமேக்ஸ் கேமராக்களால் மட்டுமே படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை 'தி ஒடிஸி' பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 17 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.