
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், சமுத்திரக்கனியுடன் இணைந்து அரிசி என்னும் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த முத்தரசன், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் விவசாய தொழிலாளர்கள் நசுக்கப்படுவதை கண்கூடாக பார்த்த முத்தரசன் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய இளைஞர் அமைப்பில் இணைந்து பணியாற்றினார். பிறகு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினுடைய ஒன்றிய, மாவட்ட பொறுப்புகளுக்கு உயர்ந்தார். அதன் பிறகு டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழிலாளர்களுக்கான பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தினுடைய மாநில செயலாளராக பொறுப்பேற்றார். அப்போது டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன் நின்று நடத்திக் காட்டினார்.
அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முத்தரசன், தமிழ்நாடு முழுவதும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர்களிடம் பணியாற்றிய எஸ்.ஏ.விஜயகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ள புதிய படத்தில் விவசாயக் கதாபாத்திரத்தில் இரா.முத்தரசன் நடித்துள்ளார். இப்படத்திற்கு அரிசி என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இப்படத்தை மோனிகா புரடக்க்ஷன்ஸ் சார்பில் பி.சண்முகம் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி, ரஷ்யா மாயன் மற்றும் சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன் ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டை மண்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். அசோக் சார்லஸ் எடிட்டிங் செய்கிறார். சேது ரமேஷ் அரங்கம் அமைக்கிறார். மகேந்திர பிரசாத் இணைத் தயாரிப்பு செய்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் விஜயகுமார் தெரிவித்திருப்பது, இப்படம் விவசாயிகளுடைய வலிகளையும், விவசாயிகளின் வாழ்வியலையும் உள்ளடக்கியது. அரிசி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது மனித வாழ்வின் உயிர்நாடி. அதனை இந்த தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இத்திரைப்படத்தின் நோக்கம். இந்த படத்தின் நடித்திருக்கும் தோழர் முத்தரசன் தன் வாழ்வின் அனுபவங்களை, சந்தித்த நிகழ்வுகளை வசனமாக பேசி இருக்கிறார். சமுத்திரக்கனியின் வசனங்களும் சிறப்பானதாக இருக்கும். இப்படம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.