இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது!

Asha Parekh
Asha Parekh
Updated on

 இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது வழங்குகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான விருது  இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு வழங்கப்பட உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் அறிவித்துள்ளார்.

 -இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்ததாவது:

 இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு  2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது  வழங்கப்படவுள்ளது.  டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவானது இம்மாதம் 30-ம் தேதி  டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் நடிகை ஆஷா பரேக்குக்கு விருது வழங்கப்பட இருக்கிறது. பிரபல நடிகை ஹேமமாலினி உள்ளிட்டோர் அடங்கிய குழு நீண்ட ஆலோசனைக்குப்பிறகு இந்த விருதுக்கு ஆஷா பரேக்கை தேர்வு செய்தனர்.

 -இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 இந்தித் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய ஆஷா பரேக், பின்னர் ஹீரோயினாக  1960-களில் வெளியான பல சூப்பர்ஹிட் இந்திப்  படங்களில் நடித்துள்ளார். அதனால் அவர், ‘பாலிவுட்டின் ஹிட் கேர்ள்’ என அழைக்கப் பட்டார். மேலும் இந்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com