திருப்பதி ஏழுமலையான நடந்தே சென்று தரிசனம் செய்த தீபிகா படுகோனே!

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

பாலிவுட்டில் கலக்கலான கேரியரை கொண்டவர் தீபிகா படுகோன். ஆண்டுகளை கடந்தாலும் தன்னுடைய அழகு, நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார். இந்த ஆண்டில் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ஜவான், பதான் படங்கள் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளன. இதனால் தீபிகாவின் மார்க்கெட் மற்றும் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுடன் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள ஃபைட்டர் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இவர் திருப்பதி ஏழுமலையானை நடந்தே சென்று தரிசனம் செய்துள்ளார். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். பல திரை பிரபலங்கள் அடிக்கடி திருப்பதி வந்து செல்வார்கள். சமீபத்தில் கூட நடிகர் ஷாருக்கான், ஜவான் படக்குழுவினருடன், ஜவான் பட வெற்றிக்காக சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

தொடர்ந்து தற்போது நடிகை தீபிகா படுகோனே தனது தங்கை அனுஷா படுகோனாவுடன் நேற்று திருப்பதிக்கு வந்தார். அலிபிரி நடைபாதை அருகே தனது காரில் வந்த தீபிகா படுகோன் திடீரென காரில் இருந்து இறங்கி நடைபாதையில் தங்கையுடன் நடந்தே சென்றார். இவரை கண்ட பக்தர்கள் நடைபாதையில் ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் விஜிலென்ஸ் போலீசார் தீபிகா படுகோனேவை பலத்த பாதுகாப்புடன் திருப்பதி மலைக்கு அழைத்து வந்தனர். மலைப்பாதையில் உள்ள கோவில்களில் கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்தார். 3 மணி நேரம் நடந்து திருப்பதி மலையை அடைந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்தார். இதையடுத்து நேற்று இரவு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com