

நேற்று நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள ஒரு எக்ஸ் தள பதிவு சினிமா வட்டாரத்தை பரபரப்பாக்கிக்குள்ளது. அந்த பதிவு ஒரு நடிகரை மறைமுகமாக தாக்குவது போல் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் ஜாலியான கதைகளில் திரைப்படம் எடுப்பவர் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபுவின் திரைக்கதைகளில் ஆழமான கதை அம்சமும் சென்டிமென்ட் காட்சிகளும் பெரும்பாலும் இடம்பெறாது. சீரியஸான அம்சம் கொண்ட திரைப்படமாக இருந்தாலும், கிடைக்கும் கேப்புகளில் எல்லாம் நகைச்சுவை மூலம் படத்தினை சுவாரசியமாக மாற்றும் திறமை கொண்டவர் வெங்கட் பிரபு. அதனால், வெங்கட் பிரபுவுக்கு என்று தமிழ் சினிமாவில் தனி ரசிகர் வட்டாரம் உள்ளது.
இறுதியாக வெங்கட்பிரபு நடிகர் விஜயை வைத்து 'தி கோட் ' என்ற நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தி கோட் திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமான ஒரு அறிவியல் புனைவு திரைப்படத்தை எடுக்க வெங்கட் பிரபு முயற்சி செய்து வந்தார்
அந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. இந்த திரைப்படத்தின் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக, வெங்கட் பிரபு அமெரிக்கா சென்று அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார். இடைப்பட்ட காலத்தில் இந்த திரைப்படத்தின் கதையில் நிறைய மாற்றங்களை சிவகார்த்திகேயன் எதிர்பார்த்தார். அதன்படி பல மாற்றங்களை வெங்கட் பிரபுவும் செய்து இருந்தார்.
இந்நிலையில் இந்த திரைப்படம் முற்றிலும் கைவிடப்பட்டதாக சினிமா துறை வட்டாரங்களில் செய்திகள் பரவியது. ஆனால் படத்தின் தயாரிப்பாளரான சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் , அந்த திரைப்படம் கைவிடப்படவில்லை அதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்று கூறியிருந்தார்.
இந்த திரைப்படத்திற்காக தனது வழக்கமான இசைக் கூட்டணியான யுவன் சங்கர் ராஜாவை தவிர்த்துவிட்டு , படத்தின் பிரம்மாண்டத்தை கருத்தில் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானை இந்த திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்ததாக தகவல்களும் பரவியது. படம் அறிவியல் புனைவு திரைப்படம் ஆக இருப்பதால் அதற்கு ஏற்ப கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் அரங்கங்கள் அமைப்பதற்கு அதிக பட்ஜெட் தேவைப்பட்டது.
படத்திற்கான சிவகார்த்திகேயனின் ஊதியமும் மிகவும் அதிகமாக இருந்ததால், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தொய்வுடன் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் பிஸியாகி விட்டதால் , வெங்கட் பிரபு சிறிய பட்ஜெட்டில் ஒரு திரைப்படம் எடுக்க முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் புதிய நாயகனாக தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் பரவுகிறது. இதுவரை அறிவியல் புனைவு கதைகளில் தனுஷ் நடிக்காமல் இருப்பதால் இந்த கதையில் அவர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நீண்ட காலம் சீரியஸான திரைக்கதைகளில் நடித்து வரும் அவர் இந்த திரைப்படம் தனக்கு வேறொரு பரிணாமத்தை கொடுக்கும். வெங்கட் பிரபுவும் இந்த பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் பான் இந்திய அளவில் தனுஷுக்கு நல்ல அறிமுகம் இருப்பதாலும் , அவரது மார்க்கெட் பாலிவுட்டிலும் கை கொடுக்கும் என்பதாலும் வெங்கட் பிரபு மகிழ்ச்சியில் இருப்பதாக கூறி வருகின்றனர்.
அதே நேரம் ஒரு சிலர் தனுஷ் பகிர்ந்துள்ள போஸ்டரை வைத்து அது ஷங்கர் இயக்கும் வேள்பாரி திரைப்படத்திற்காக அறிவிப்பாக இருக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் தனுஷ் வைக்கும் சஸ்பென்ஸ் வரும் 10 ஆம் தேதி உடைந்து விடும்..