

ஏராளமான எதிர்பார்ப்புகளை உருவாக்கிய துரந்தர் திரைப்படத்தின் இரண்டாவது பாகமான, துரந்தர் தி ரிவெஞ்ச் பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகிய துரந்தர் திரைப்படத்தின் முதல் பாகம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ₹1350 கோடி வசூலை வாரி குவித்தது. இந்த வெற்றி பாலிவுட்டிற்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. துரந்தர் திரைப்படத்தின் எதிர்பாராத பெரிய வெற்றிக்கு , சுவாரசியம் மிகுந்த திரைக்கதையே முக்கிய காரணம்.
நீண்ட காலமாக பாலிவுட் திரைப்படங்கள், பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவிக்காமல் ஏமாற்றி வந்தன. அதேநேரம் தென்னிந்தியாவின் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் தேசிய மார்க்கெட்டை பிடித்து, பெரிய வெற்றி திரைப்படங்களை கொடுத்து கொண்டு வந்தனர். பாகுபலி திரைப்படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் தெலுங்கு ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
பாகுபலி 2 , புஷ்பா 2 , RRR , கல்கி 2898 AD போன்ற திரைப்படங்கள் 1000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து பாலிவுட்டை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துக் கொண்டனர். கன்னட திரைப்படமான KGF மற்றும் KGF சாப்டர் 2 ஆகியவையும் இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்த பாலிவுட் திரைப்படங்கள் ₹300 கோடி வசூலை தாண்டவே திணறிக் கொண்டிருந்தனர். ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் ₹1000 கோடியை தாண்டினாலும் , பாலிவுட் திரையுலகம் மீட்சி அடையவில்லை.
கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில், விக்கி கவுசல் நடிப்பில் வெளியான வரலாற்று திரைப்படமான 'சாவா' ஹிந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டு 800 கோடிகளை குவித்து, பாலிவுட்டிற்கு நம்பிக்கை ஒளியை கொடுத்தது. அதே வருட இறுதியில் வெளியான துரந்தர்- 1 திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ₹28 கோடி வசூலித்தது. அடுத்த சில நாட்களில் அதன் வசூல் அதிகமாகியதே தவிர குறையவில்லை. 9 வது நாள் ₹53 கோடியும், 10 வது நாளில் ₹58 கோடியும் வசூலித்து தெலுங்கு திரையுலகை மிரட்டியது. 100 நாட்களை திரையில் கடந்து ₹1305 கோடி வசூலித்து சாதனை செய்தது.
பாகிஸ்தான் நாட்டிற்கு உளவாளியாக சென்று , அங்குள்ள தீவிரவாத குழுக்களுடன் பழகி அவர்களை வேட்டையாடும் ஒரு இந்தியனின் கதை தான் துரந்தர். இந்த திரைப்படம் வழக்கமான ஹாலிவுட் உளவாளி பாணியில் இல்லாமல் , மிகவும் இயல்பாகவும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இருந்ததால் , மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் , சஞ்சய் தத் , வினோத் கண்ணா , அர்ஜூன் ராம்பால் , மாதவன் , சாரா அர்ஜூன் ஆகியோர் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தின் வெற்றிக்களிப்பு அடங்கும் முன்னர், அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' மார்ச் 18 அன்று வெளியானது. இதன் பிரிமியர் காட்சி மட்டுமே ₹52 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.முதல்நாள் முடிவில் ₹245 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் முதல்நாள் வசூல் பாகுபலி 2 , கேஜிஎப் 2 , கல்கி 2898 AD , பதான், ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
2- வது நாள் இத்திரைப்படம் உலகளவில் ₹370 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இன்று முதல் ( மார்ச் 21). தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் ஆகிய பிராந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது. ரம்ஜான் மற்றும் வார இறுதி வந்துவிட்டதால் துரந்தர் தி ரிவெஞ்ச் , உக்கிரமாக வசூல் வேட்டையாடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.