"மனதில் உறுதிவேண்டும்" வெளியாகி 36 ஆண்டுகள்... மாற்றம் கண்டுள்ளதா நந்தினிகளின் வாழ்க்கை?

மனதில் உறுதிவேண்டும் படம்
மனதில் உறுதிவேண்டும் படம்

பொதுவாக திரைத்துறையில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் மிக குறைவே. இன்றைக்கு கால மாற்றத்தினால் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வருடத்தில் ஒரு படமாவது வெளிவருகிறது. ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் இயக்குநர் கே.பாலசந்தரின் ”மனதில் உறுதிவேண்டும்”.

நடிகை சுஹாசினி மைய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் இக்கால பெண்களின் வாழ்க்கைக்கும் பொருந்திபோகும் பல விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. 1987ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று தீபாவளி நாளில் வெளியான மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் பெண்கள் மீதான குடும்ப வன்முறை, தனித்து வாழும் பெண்களின் பிரச்சனை மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் பெண்ணியம் குறித்து ஒரு நீண்ட விசாலமான பார்வை கொண்டிருந்த இயக்குநர்களில் முதன்மையானவர் இயக்குநர் சிகரம் என்றழைக்கப்படும் கே. பாலசந்தர். இவர் இயக்கத்தில் வெளியான ’அரங்கேற்றம்’, ’அபூர்வ ராகங்கள்’, ’அவர்கள்’, அவள் ஒரு ’தொடர்கதை’,’கல்கி’,‘கல்யாண அகதிகள்’, ’சிந்து பைரவி’, ‘தண்ணீர் தண்ணீர்‘ என பெண்களை மையப்படுத்தி கே.பாலசந்தர் இயக்கத்தில் எடுக்கப்பட்ட படங்களின் வரிசையில் முத்தாய்ப்பாய் அமைந்த படம்தான் ‘மனதில் உறுதி வேண்டும்’. பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் நடக்கும் சமூக விஷய ங்களை இயன்றவரை பதிவு செய்து விடுவார் பாலசந்தர்.                       

1980 களில் கல்வி, மருத்துவம், வ ங்கி உட்பட பல்வேறு சேவை  துறைகளில் படித்த பெண்கள் கணிசமான அளவு  வேலைக்கு வர துவங்கினர். கிராமப் பு றங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து குறிப்பாக வரத் துவங்கினர். அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி பல புதிய  தொழில் நுட்பத்தை பல் வேறு துறைகளில் அறிமுகம் செய்து மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தார்.

காமராசர்,எம் ஜி. ஆர் அவர்கள் கல்விக்கு தமிழ் நாட்டில்  உருவாக்கி வைத்திருந்த கட்டமைப்பு இந்த முயற்சியை சுலபமாக ஏற்றுக்கொண்டது. படித்த பெண்கள் பலர் வேலைக்கு வர துவங்கினார்கள். குடும்பத்திலும், வெளியிடங்களிலும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் இப்பெண்களின் வளர்ச்சியை பொறுத்து கொள்ள இயலாமல் பலர்  முட்டு கட்டை போட்டார்கள். இது சமத்துவம் பேசும் இந்த காலத்திலும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம், காதல், விவாகரத்து, பணியிடங்களில் பாலின சமத்துவம் என பல விஷயங்கள் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும்.                  மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் வெளியாகி   36 ஆண்டுகள் கடந்து விட்டது.  முன்பை விட இன்றைய  பெண்கள் அதிக அளவில் படிக்கிறார்கள். பலர் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் 15 ஆண்டுகள்  பெண் முதல்வர் ஆட்சி செய்துள்ளார்.

மனதில் உறுதி வேண்டும் படம்
மனதில் உறுதி வேண்டும் படம்

இந்தியாவின் குடியரசு தலைவராக ஒரு பெண் இருக்கிறார்.  இன்றைய பெண்கள்  மருத்துவம், கல்வி மட்டுமில்லாமல்  தகவல் தொழில் நுட்பம், ஊடகம், ஆட்டோ மொபைல் போன்ற பல துறைகளில் பணி புரிகிறார்கள்.தேர்வுகளில் மாணவிகளை விட மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். இருப்பினும் பணி இடங்களிலும் பொது வெளிகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தீர்ந்தபாடயில்லை.

மனதில் உறுதி வேண்டும் படத்தில் நாயகி  சுஹாசினி கதாப்பாத்திரத்தின் பெயர் நந்தினி. இந்த பெயரின் பாதிப்பால் இயக்குனர்கள் பலர் தங்கள் பட ஹீரோயினுக்கு நந்தினி என்று பெயர் வைத்தார்கள். பெயர் மட்டும் வைத்தார்களே தவிர பாலசந்தர் படைத்ததை போல பெண்ணியம் சார்ந்த படங்களை உருவாக்க பல டைரக்டர்கள் முயற்சி செய்ய வில்லை. (பாரதி ராஜாவின் கருத்தம்மா போன்ற விதி விலக்கு களும் உள்ளன )  சினிமாவில் தொழில் நுட்பம் வளர்ந்த சம காலத்திலும் ஹீரோயின்கள் பல படங்களில்   கவர்ச்சிக்காக மட்டுமே பயன் படுத்த படுகிறார்கள்.             

"கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போவியா?" என்ற கேள்வி இன்றும் பல பெண்களிடம் கேட்கப்படுகிறது. திருமணத்திற்க்கு  பின்பு தங்கள் பெற்றோர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்ய நினைக்கும் பெண்கள் பலர்  தங்கள் கணவர்   அனுமதி பெற வேண்டியுள்ளது.          மனதில் உறுதிவேண்டும் படத்தில்  "மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம் "என்ற பாடல் வரி இப்படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் இப்போதும் பெருத்தமாகவே உள்ளது.

இன்றைய பெண்கள்  பாரதி தந்த மனதில் உறுதி வேண்டும் என்ற வாக்கியத்தை வாழ்வியலாக கொண்டு தனக்கு நடக்கும் தீமைளை எதிர்த்து நிற்க வேண்டும். மனதில் உறுதி வேண்டும் படமும், பாடல்களும் சர்வதேச பெண்கள் தினத்தில் மட்டும் இல்லாமல் அதற்கான மாற்றத்தைநோக்கி பயணிக்க ஆரம்பிப்பதில்தான் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com