தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி வைத்தவர் தான் இயக்குனர் முத்தையா. குட்டிப்புலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா அடுத்து, தனது மகனை ஹீரோவாக்கி படம் இயக்கவுள்ளார்.
முத்தையா கடைசியாக ஆர்யாவை வைத்து இயக்கிய, காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எதிர்பார்த்த வசூலை பெறாமல் போனது.
இதையடுத்து கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். இவர்கள் இருவரையும் தனித்தனியாக முத்தையா இயக்கியிருந்தும், இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. குறிப்பாக கௌதம் கார்த்திக் இந்த காம்பினேஷனை விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து அருண் விஜய்க்கு ஒரு கதை தயார் செய்தார். பிற படங்களின் பிஸி ஷெட்யூல்ட் காரணமாக அவராலும் உடனடியாக கால்ஷீட் தர இயலவில்லை. இந்நிலையில், தனது மகனையே ஹீரோவாக்குவது என்று தீர்மானித்து அதற்காக கதையும், தயாரிப்பாளரையும் தயார் செய்தார். தற்போது பூஜை போட்டு, படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளார்.
மகன் விஜய் முத்தையா ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு அமரன் விஜய் என்ற பெயரை முத்தையா தேர்வு செய்திருந்தார். சிவகார்த்திகேயன் படத்துக்கு அமரன் என்று பெயர் வைத்துள்ளதால் வேறு நல்ல பெயராக தேடி வருகிறார்கள். இந்தப் படத்தில் விஜய் முத்தையா ஜோடியாக தர்ஷினி நடிக்க, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கே.கே.ஆர்.சினிமாஸ் ரமேஷ் பாண்டியன் படத்தைத் தயாரிக்கிறார்.