ஏ.வி.எம். (AVM) நிறுவனம் தனது பொன்விழா ஆண்டை நினைவு கூரும் வகையில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்தது. ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியான அத்திரைப்படம் 'மின்சார கனவு'. இந்தப் படத்தின் மூலம் ராஜீவ் மேனன் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடல் உருவான விதம் பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
1997-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வந்த 'மின்சார கனவு', 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் வணிக ரீதியாகப் பெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி, இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. வைரமுத்துவின் ஆழமான வரிகளுடன், ஏ.ஆர். ரஹ்மானின் இசை நுணுக்கங்களால் இப்பாடல்கள் காலத்தால் அழியாத தன்மையைப் பெற்றன.
இன்று வரை ரசிகர்களால் விரும்பித் தேடப்படும் 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடல் குறித்து 'Noise and Grains' என்ற யூடியூப் (YouTube) சேனலுக்குப் பேட்டியளித்த ஏ.ஆர். ரஹ்மான், தான் இப்பாடலுக்கு இசையமைக்கும் சமயத்தில் நோன்பு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போதுதான் இந்தப் பாடலுக்கான மெட்டு (Tune) அவருக்குத் தோன்றியுள்ளது. அந்த மெட்டை வாசித்த பொழுது, "இதுதான் நான் எதிர்பார்த்த இசை" என்று உணர்ந்து உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டி இருந்ததால் அது தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும், அந்த டியூனை வாசித்த பொழுது இதுதான் தான் எதிர்பார்த்த டியூன் என்று உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் இதுவரை யாரும் அதிகம் பயன்படுத்தாத டஃப்(duff) எனும் பழங்காலக் கருவியை அந்தப் பாடலில் பயன்படுத்தியதாகவும் கூறினார். இந்தப் பாடலில் தான் அந்தப் பழங்கால இசைக் கருவியை பயன்படுத்தி வித்தியாசமான பாடலை உருவாக்கியதாகவும், அதன் வெற்றி இன்று வரை தொடர்கிறது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.