பவதாரிணியின் இறுதி சடங்கில் மொத்த குடும்பமும் கண்கலங்கிய படி மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை பாடினர்.
இதுவரை தமிழ் சினிமாவில் 30க்கும் மேற்பட்ட பாடலை பாடியும், 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தும் தந்தை இளையராஜாவுக்கு புகழ் சேர்த்தவர் பவதாரிணி. இவருக்கு திடீரென கல்லீரல் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 6 மாத காலமாகவே இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
இந்த நிலையில் நேற்று இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல் சென்னை தி,நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான திரைபிரபலங்கள் பங்கேற்று பவதாரிணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நேற்று இரவு அவரது உடல் இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணயபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. இன்று அவருக்கு வேதங்கள் முழங்க இறுதி சடங்கு நடைபெற்றது. அப்போது அவரின் தேசிய விருது பாடலான மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை கண்ணீர் வடித்த படி மொத்த குடும்பமும் பாடி செல்ல மகளுக்கு பிரியாவிடை கொடுத்தனர், இதையடுத்து இளையராஜாவின் பண்ணை வீட்டிலேயே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.