தனது முழு உடலையும் ஆராய்ச்சிக்காக ஒரு மருத்துவமனைக்கு தானம் செய்வதாகவும், ஆனால், இதயத்தை மட்டும் இவர்களுக்கு கொடுத்துவிடுங்கள் என்று பேசியிருக்கிறார் நடிகர் ஷிஹான் ஹுசைனி.
1986ம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. இவர் ஒரு கராத்தே மாஸ்டர் ஆவார். பின்னர் நடிகராக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜயின் பத்ரி படத்தின் மூலம் இவர் சினிமா துறையில் நன்று அறியப்பட்டவராக மாறினார். 2022இல் வெளியான காத்துவாக்குல 2 காதல் படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இவர் சுமார் 400 வில் வித்தைக்காரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
இப்படியான நிலையில்தான் அவருக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும், ஒரு நாளைக்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் ப்ளேட்லட்ஸ் தேவைப்படும் என்றும் கூறியிருக்கிறார். இப்படித்தான் தினமும் தனது வாழ் நாளை கூட்டி வருவதாக கூறினார்.
இதுகுறித்து அவர் பேசும்போதுதான் சில விஷயங்களை கூறினார். “மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக எனது உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த 3 நாள்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன். இக்கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீ ராமசாமி உடையார், எனது இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருந்தவர். எனது ‘Snake Bite World Record’ நிகழ்வுக்கும் தலைமை தாங்கியவர்.
என்னுடைய இதயத்தை மட்டும் பாதுகாப்பாக கராத்தே மற்றும் வில் வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதைப் படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனே வந்து, என்னுடைய அதிகாரப்பூர்வ ஒப்புதலையும், எனது கையொப்பத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.
சினிமா துறையில் எத்தனையோ பேர் இதுபோன்ற கடுமையான நோயால் பாதிக்கப்படதான் செய்கின்றனர். அதில் வெகு சிலரே இதுபோல், சில நல்ல காரியங்களை செய்கின்றனர்.