‘வயாகாம் 18’ மற்றும் ‘ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட்’ இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காதலையும், வாழ்வியலையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4ஆம் தேதியன்று வெளிவரவிருக்கும் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பர நிகழ்வு சென்னை வடபழனியிலுள்ள பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் அசோக்செல்வன் பேசுகையில், ''நித்தம் ஒரு வானம் என்னுடைய திரையுலகப் பயணத்தில் ஸ்பெஷல் திரைப்படம். இந்தப் படம் ‘ஓ மை கடவுளே’ ஏற்படுத்திய தாக்கத்தை விட கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படப்பிடிப்பின்போது அதிசயமான அனுபவம் ஒன்று கிடைத்தது. பனி விழும் இடம் ஒன்று வேண்டும் என்று ‘ரோதங் பாஸ்’ எனுமிடத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு, அனைவரும் அங்கு சென்றோம். பிறகுதான் தெரிந்தது, அது பனி விழும் சீசன் இல்லையென்று. அனைவர் முகத்திலும் கவலை ஏற்பட்டது. இருந்தாலும் படப்பிடிப்பு நடத்தினோம். கோடை காலம் போல் வெயில் வெளுத்து வாங்கியது. சில மணி நேரங்களிலேயே மெதுவாக பனி சாரல் தொடங்கியது. சற்று நேரத்தில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி பொழியத் தொடங்கியது. இயக்குநர் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது. அங்குள்ள மக்கள், ‘இந்த சீசனில் பனி பொழியத் தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாகி விட்டது’ என்ற தகவலை எங்களிடம் சொன்னபோது, நாங்கள் ஆச்சரியப்பட்டோம். நாம் ஏதாவது ஒன்றை வேண்டும் என்று விரும்பினால், அதனை இந்தப் பிரபஞ்சம் வழங்கும் என்பார்கள். அதனை நாங்கள் அந்தத் தருணத்தில் நிஜமாகவே உணர்ந்தோம்'' என்று கூறினார்.
படத்தின் தயாரிப்பாளர் சாகர் பேசுகையில், '' இந்தப் பட விளம்பரத்தில் மூன்று கெட்டப்புகளில் நாயகன் அசோக் செல்வன் தோன்றுகிறார். ஆனால், படத்தில் இதைத் தவிர்த்து நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் அசோக் செல்வன் வருகிறார். அது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்” என்று சஸ்பென்ஸ் ஒன்றைக் கூறி பார்வையாளர்களை ஆச்சரிப்படுத்தினார்.