நடிகர் மன்சூர் அலிகான் அபராதம் கட்ட அவகாசம் கேட்ட விவகாரத்தில் நீதிபதி அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்சூர் அலிகானின் இந்த வீடியோவை பார்த்த நடிகை த்ரிஷா, தனது எக்ஸ் தளத்தில், இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இதனால் இவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும் விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இந்த வழகை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் பெரும் தொகையான இந்த ஒரு லட்சம் ரூபாயை செலுத்துவதற்கு பத்து நாட்கள் மேலும் அவகாசம் வேண்டும் என்று மன்சூர் அலிகான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைகேட்ட நீதிபதி ஒருவரை பற்றி கருத்து தெரிவிக்கும் முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்து 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.