காலா பட நடிகையிடம் நூதன மோசடி!

anjali patil
anjali patil
Updated on

காலா பட நடிகை அஞ்சலி பாட்டீலை தொலைபேசி வழியாக மிரட்டி 5 லட்சம் பணம் சுருட்டிய கும்பலை தேடி வரும் போலீஸ்.

பாலிவுட்டில் பிசியான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அஞ்சலி பாட்டீல். இவர் தமிழில் காலா திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அஞ்சலி பாட்டீலுக்கு கொரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதில் வெளிநாட்டில் இருந்து அவருக்கு வந்த பார்சலில் போதைப் பொருள் இருப்பதாகவும், இதை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியிருக்கின்றனர்.

மேலும் இது தொடர்பான விசாரணையை மும்பை சைபர் குற்றப்பிரிவு துறையினர் விசாரித்து வருவதாகவும் கூறி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து மும்பை சைபர் குற்றப்பிரிவு துறையிலிருந்து பேசுவதாக கூறிய ஒரு நபர், நடிகையிடம் தங்களுக்கு போதைப்பொருள் வந்திருப்பதாகவும், மேலும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து சட்ட விரோத பண பரிவர்த்தனை நடத்தி இருப்பதாகவும் இதற்கு கட்டணமாக 96 ஆயிரத்து 525 செலுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். உடனே அந்த தொகையை ஆன்லைன் வழியாக செலுத்தி இருக்கிறார்.

மேலும் 4,83,291 ரூபாய் செலுத்த வேண்டும் என்று மோசடி நபர் கூற, மீண்டும் கேட்டத் தொகையை செலுத்தியுள்ளார் அஞ்சலி. அதன் பிறகு, அவர் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி. இதைத் தொடர்ந்து போலீசார் பணம் பெறப்பட்ட வங்கிக் கணக்கை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் நடிகை அஞ்சலி இடமும் ஏற்கனவே ஏதேனும் பார்சல் வந்துள்ளதா, அதில் போதைப்பொருள் இருந்ததா, சட்டவிரோத பரிவர்த்தனை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com