கண்ணதாசன் - எம்.எஸ்.வி: வாழ்க்கையை உணர வைக்கும் உணர்ச்சிகளின் காவியம்!

தலைமுறைகள் மாறினாலும் மாறாத கவித்துவமும், காலத்தை வென்ற மெல்லிசையும் கலந்த கலவை.
Kannadasan-M. S. Viswanathana
Kannadasan-M. S. ViswanathanaAI Image
Updated on

கவியரசர் கண்ணதாசன்னா எம்.எஸ்.வி

எம்.எஸ்.வினா கவியரசர்

தமிழ்த் திரைப்பட வரலாற்றின் பொற்காலம்... இவர்களின் கூட்டணி.

பாட்டும், மெட்டும் ஒரே நாளில் பிறந்தது... வரலாற்று நிகழ்வு... காலத்தின் ஆச்சர்யம். 

ஜூன் 24.

மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது பாடலின் இசையும் வருத்தமாக இருக்கும் போது பாடலின் வரிகளும் நமக்கு பிடிக்கும்... 

அப்படிப்பட்ட சில பாடல்களின் தொகுப்பு....

'அச்சம் என்பது மடமையடா 

அஞ்சாமை திராவிடர் உடமையடா'..

திராவிடனின் பெருமையை பறைசாற்றும் வரிகள். (ரசிக்க நிச்சயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்)

'கருவினில் வளரும் 

மழலையின் உடலில் 

தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை...'

பாடல் வரிகளில் என்னவொரு  சுறுசுறுப்பு. 

வீரத்தையும் கோபத்தையும் சிரிப்பையும் வரிகளில் காட்டிய கவியரசருக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை எம் எஸ் வியின் இசை.

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்...' 

(கவியரசரும் எம்.எஸ்.வி ஐயாவும் தான் சந்தேகமே இல்லை.)

கடைசி தலைமுறை வரை தாங்கும் அருமையான பாடலை தன் கம்பீரமான குரலில்பாடி இருப்பார் டி எம் எஸ்.

Kannadasan-M. S. Viswanathana
Kannadasan-M. S. ViswanathanaAI Image

'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா'...

மகாபாரதத்தின் சாராம்சத்தை இந்த ஒரே பாடலில் காட்டிய கவியரசரின் புலமையை என்னவென்று சொல்வது... ?!

'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க 

சேராத இடம் சேர்ந்து 

வஞ்சத்தில் விழுந்தாயடா கர்ணா

வஞ்சகன் கண்ணனடா...'

ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த வரிகளுக்கு உயிரோட்டமா இசை சமர்ப்பணம் செய்திருப்பார் எம்எஸ்வி.

இறைவனைப் பற்றி மனிதன் பாடும் பாடல்கள் நிறைய உண்டு. ஆனால் மனிதனைப் பற்றி இறைவன் பாடும் ஒரே பாடலான இந்தப் பாடலை தன் வெண்கல குரலில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடி பாடலை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்.'

'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

 இதோ அந்த அலைகள் போல ஆடவேண்டும்.'...

காதல் நட்பு சமூகம் இப்படி எல்லாவற்றையும் மையப்படுத்திஅதோடு விடுதலை உணர்வையும் தூண்டிய எழுச்சியான வரிகளுக்கு புத்துணர்ச்சி இசை ... படு பொருத்தமாய்.

'காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே 

கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே...'  

கவித்துவமான வரிகள் தூங்கும் மனிதரைக் கூட தட்டி எழுப்பும் இந்த பாடலின் இசை.

(குறிப்பாக ல லா லா... அதைத் தொடர்ந்து வரும் புல்லாங்குழல்) யுகங்கள் பல ஆனாலும் ரசிக்க வைக்கும்.

'தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

 இந்த ஊர் என்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே...' 

வரிகளுக்கு தகுந்தாற்போல மென்மையான இசை  தாலாட்டும்.

'வெறும் கோயில் 

இதில் என்ன அபிஷேகம்....?'

இயலாமையை இதைவிட வேறு வார்த்தையில் சொல்லி விட முடியுமா?

'நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா

இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா... ?

ஆதி வீடு அந்தம் காடு...'

மூணு தலைமுறைக்கும் சேர்த்துதந்த  அறிவுரைகளை இரைச்சல் இல்லாத இசை மூலம் நம்முள் கடத்திருப்பார் எம் எஸ் வி. 

'தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்'

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் அனுபவித்த ஒரு ஞானியின் வார்த்தைகளாகவே இந்தப் பாடல். வரிகளில்.. வலி ..

'ஆயிரம் நினைவாகி

 ஆனந்தக் கனவாகி 

காரியம் தவறானல்

கண்களில் நீராகி'...

எல்லா நினைவுகளும் ஆசை கனவுகளாக செயல் தவறானால் கண்ணீராக ...என்று பல வடிவம் எடுக்கும் உள்ளுணர்வை ... வார்த்தைகளில் கொடுத்திருக்கும் கவியரசரின் மாஸ்டர் பீஸ் இந்தப் பாடல் 

Kannadasan-M. S. Viswanathana
Kannadasan-M. S. ViswanathanaAI Image

'ஒரு கணம் தவறாகி 

 பல யுகம் துடிப்பாயே 

ஊமையின் பரிபாஷை

கண்களில் வடிப்பாயே...'

ஒரு நல்ல மனசு செய்த தவறை எண்ணி எண்ணிஅழுவதை வார்த்தைகளாக...

கவியரசரின் விரல்களில் விளையாடிய வார்த்தைகளுக்கு எம் எஸ் வியின் மெல்லிசை மனசாட்சியின் மௌன கீதமாய்... 

'வசந்த கால நதிகளிலே  

வைரமணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே 

நெஞ்சிரண்டின் நினைவலைகள்..'

அந்தாதிவகை பாடல் .. முடியும் வரி அடுத்த வரியில் தொடக்கம்

தமிழ் இலக்கணத்தோடு சிந்து விளையாடி இருக்கும் கவியரசரசரின் வரிகளுக்கு ரத்தின சுருக்கமாய்  இசைப் போட்டிருப்பார் எம் எஸ் வி.

இன்னாரை மனம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பது இறைவன் வகுக்கப்பட்ட விதி என்பதை பாடல் வரிகள் மூலம் எளிமையாக சொல்லி இருப்பார் கவியரசர்.

மௌத் ஆர்கான் இசை தாலாட்டும்..

'மன வினைகள் யாருடனோ... 

மாயவனின் விதி வகைகள்...'

இந்த வரிகளுக்கு எம் எஸ் வி யின் குரல் சாலச் பொருத்தம்.

'இலக்கணம் மாறுதோ 

இலக்கியம் ஆனதோ..'

(இப்போதுள்ள தலைமுறைக்கு இப்பாடலை உச்சரிக்கக் கூடத் தெரியாது.)

'என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்

உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்..'

கரை/கறை வார்த்தை ஜாலங்கள் கவியரசரால் மட்டுமே முடியும்.

திரைப்படத்தின் சுருக்கத்தை நாலு நிமிட பாடலில்  சொன்னதை  தேவதானமாக்கி விருந்து படைத்திருப்பார்  எம்எஸ்வி  ...

தபேலா துடிக்க ... நம் இதயம் சேர்ந்து  துடிக்கும்.

இதையும் படியுங்கள்:
எம்ஜிஆர் ரெக்கார்டை அசால்ட்டாக உடைத்த தளபதி விஜய்... அப்படி என்ன செஞ்சாரு பாருங்க!
Kannadasan-M. S. Viswanathana

'வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று 

யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று...' 

பொருள் பொதிந்த வரிகள்.

'மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன

உனக்கும் வாழ்வு வரும்...'

கவியரசர் எழுதிய காவியப் பாடல்களில் ஒன்று இது

'பொருத்தம் உடலிலும் வேண்டும்

புரிந்தவன் துணையாக வேண்டும்

கணவனின் துணையோடு தானே

காமனை வென்றாக வேண்டும்...'

கணவன் மனைவிக்கு இடையே உண்டான பந்தத்தை எடுத்துரைக்கும் மிக அழகான பாடல் வரிகள் அதற்கு மிகப் பொருத்தமா எம்எஸ்வி இசை... 

இப்படி இவர்கள்  கூட்டணியில் அமைந்த  பாடல்களில் மனிதர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் பிறப்பு , இறப்பு , சோகம்,  ஏமாற்றம் ஆசைகள் விரக்தி என அனைத்தையும் உணரலாம்...

சிந்திக்க தூண்டும் வார்த்தைகள்... அமைதியை தரும் இதமான இசை... இவர்களின் காம்போ... வேற லெவல்.

இருவரும் போதி மரத்தடி ஞானத்தை மிகச் சுலபமாக நம்முள் கடத்துவதில் வல்லவர்கள்.

இந்த ஜென்மத்தில் இவர்களின் படைப்புகளை கேட்கும் நாம் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்

logo
Kalki Online
kalkionline.com