

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நட்சத்திர தம்பதிகளான குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோரின் மூத்த மகள் அவந்திகாவிற்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது. கோவாவில் நடைபெறும் இந்த திருமணத்தில் மொத்தமாகவே 25 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். குஷ்புவின் மகள் அவந்திக்காவும் , அவரது மணமகனான மெர்சன்ட் நேவி அதிகாரி ஷ்ரவன் சீனிவாசனும் நீண்ட காலமாகவே காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் இரண்டு வீட்டிற்கும் தெரிய வர , இரண்டு குடும்பங்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறுகிறது.
தற்போது குஷ்புவின் மகள் அவந்திகா 'ஆரம்பம்' என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பவிஷ் நாராயணனுடன் இணைந்து 'அட்டாக்கர்' என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவந்திகாவின் திரைப்படங்கள் எதுவும் இன்னும் வெளியாகாத நிலையில் திடீரென்று அவர் திருமணம் செய்து கொள்வது ரசிகர்களை வியப்புக்கு ஆளாக்கி உள்ளது. திருமணம் முடிந்த பின்னரும் தனது கலை சேவையை தொடர அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த இரு நட்சத்திர தம்பதிகள் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குஷ்பூ பத்தாண்டுகளுக்கு முன்னரே அரசியலில் களம் புகுந்து விட்டார். முதலில் திமுகவில் பயணித்து வந்தவர் தற்போது பாஜக கட்சியில் பயணித்து வருகிறார். சுந்தர்.சி நீண்ட காலம் அரசியல் பக்கம் தலை காட்டாமல் இருந்தவர், திடீரென்று தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பாக போட்டியிட்டார்.
செல்வாக்கு வாய்ந்த இந்த தம்பதிகளின் வீட்டு முதல் திருமணம் மிகவும் எளிய முறையில் நடைபெறுவது திரையுலக வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுவயதில் இருந்து பிரபலமான குடும்பத்தில் வளர்ந்து இருந்தாலும், மணமகள் அவந்திகாவிற்கு ஆடம்பரமாக செலவழித்து திருமணம் செய்து கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. அவர் தனது வருங்கால கணவரிடம் " நமது பெற்றோர்களின் சம்மதத்துடன் அதிக பேரை அழைக்காமல் பதிவு திருமணம் செய்து கொள்ளலாம்" என்று ஆலோசனை கூறியுள்ளார்.
மகளின் விருப்பம் ஒருபுறம் இருந்தாலும் தங்கள் வீட்டு திருமணம் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறாமல், ஒரு அழகான இடத்தில் நடத்த வேண்டும் என்று சுந்தர்.சி யும் குஷ்புவும் முடிவு செய்தனர். அதே நேரம் மணமகள் அவந்திக்காவிற்கு கூட்டம் என்றாலே அலர்ஜி என்பதால் , இந்த திருமண விழாவிற்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள் 25 பேர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில், கோவாவில் திருமண ஏற்பாடு நடைபெற்றுள்ளது.
அவந்திகா மற்றும் ஷ்ரவன் திருமணத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி , தமிழக முதல்வர் விஜய் ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் பிரபலமான முகமாக இருக்கும் குஷ்புவின் வீட்டு திருமணத்திற்கு பிரதமர் வருவாரா? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே நேரம் குஷ்புவிற்காக இந்த திருமணத்தில் விஜய் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் "விஜய் தனது தம்பி என்பதால் அவருக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டேன்" என்று குஷ்பு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சுந்தர்.சியும் விஜய்க்கு எதிராக கருத்து கூற மாட்டேன் என்று பொதுவெளியில் கூறியிருந்தார்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here