
லவ் டுடே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கிய புகழ்பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு லவ் டுடே என்ற படத்தை இயக்கினார். மேலும் அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்ததை அடுத்து பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக நடிக்க வைக்க முன்னணி இயக்குனர்கள் பலரும் கதைகளோடு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் திரைப்படத்தில் கதாநாயகன் நடித்து வருகிறார். தற்போது அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஸ்வந்த் மாரிமுத்து 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரை வைத்து ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஓ மை கடவுளே திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அவர் படங்களை இயக்க முன்வரவில்லை.
இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய காதல் திரைப்படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதீப் ரங்கநாதன் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு இந்த புதிய திரைப்படத்தில் இணைவார் என்று சொல்லப்படுகிறது.