
2000-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சினிமாவில் முன்னனி நாயகர்களில் ஒருவராக வலம் வரும் இவர் ரசிகர்களால் செல்லமாக ‘சாக்லேட் பாய்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளே ஏராளம். ஒருகாலத்தில் இவரை ரசிப்பதற்காகவே படங்களை பார்த்த ரசிகைகளும் உண்டு.
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ‘சாக்லேட் பாய்' ஆக வலம் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் மாதவன், இப்போது வித்தியாசமான கதைகளில் நடித்து தன்னை சிறந்த நடிகராக நிரூபித்து வருகிறார். ‘மேடி' என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் மாதவன் நடிப்பில் கடைசியாக ‘டெஸ்ட்' என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
தற்போது மாதவன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘ஆர்.ஆர்.ஆர்.' படத்துக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு - பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
ரூ.1,000 கோடி ‘பட்ஜெட்'டில் உருவாகும் இப்படத்தில் ஏற்கனவே பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது மாதவனும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘இண்டியானா ஜோன்ஸ்' போல உலக அளவிலான ஆக்ஷன் - அதிரடி படமாக எனது புதிய படம் இருக்கும், என்று இயக்குனர் ராஜமவுலி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'பென்ஸ்' திரைப்படத்தில் நடிகர் மாதவன் இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். LCUவில் இந்த படம் இணைந்துள்ளது. ஏற்கனவே 'பென்ஸ்' திரைப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது நடிகர் மாதவனும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.