“த்ரிஷாதான் வழக்கு போட்டிருக்கவேண்டும்” மன்சூர் அலிகானை எச்சரித்த நீதிமன்றம்!

நடிகை திரிஷா,மன்சூர் அலிகான்
நடிகை திரிஷா,மன்சூர் அலிகான்

டிகை த்ரிஷா, நடிகர் சிரஞ்சீவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு ஆகியோரிடம் ரூபாய் ஒரு கோடி கேட்டு மனநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த நடிகர் மன்சூர் அலிகானை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்சூர் அலிகானின் இந்த வீடியோவை பார்த்த நடிகை த்ரிஷா, தனது எக்ஸ் தளத்தில், இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர். த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிரஞ்சீவி,நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட திரைபிரபலங்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். இந்த சம்மனை ஏற்று நடிகர் மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து போலீசாரின் கடிதத்திற்கு நடிகை திரிஷா பதிலளித்திருந்தார் அதில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அதில், முழு வீடியோவையும் பார்க்காமல், தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டியுள்ள மன்சூர் அலிகான், மூன்று பேரும் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென கூறிய நீதிபதி எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? எனவும் மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

நடிகராக இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில் பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதி பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துமாறு அவரது வழக்கறிஞர் குரு தனஞ்ஜெயிடம் கூறினார்.

மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக இது போன்ற சர்ச்சையான செயல்களில் ஈடுபடுவதாக கூறிய நீதிபதி எதற்காக அவர் ஊடகங்களை சந்திக்கிறார்? அவருக்கு வேறு பணி இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினார். தாம் எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் மன்சூர் அலிகான் கைது நடவடிக்கைகளில் தப்பிப்பதற்காகவா? நிபந்தனை அற்ற மன்னிப்புக் கோரினாரா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞர், தாம் பேசியது தொடர்பாக முழு வீடியோவையும் தாக்கல் செய்வதாகவும், தம்மை பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை திரிஷா நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனைத்தொடர்ந்து நடிகை திரிஷா தரப்பில் வழக்கறிஞர் கே.வி. பாபு ஆஜராகி, மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில் இந்த விவகாரம் முடிந்து விட்டதாகவும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தாமே அமைதியாக உள்ள நிலையில் தற்போது எதற்கு அவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரியவில்லை என கூறினார்.

இதனையடுத்து, மன்சூர் அலிகானின் மனு குறித்து நடிகைகள் திரிஷா மற்றும் குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com