இளையராஜாவுக்கு 'இசைஞானி' பட்டம் கொடுத்தது யார் தெரியுமா? மணிரத்னம் - இளையராஜா பிறந்தநாளில் வைரலாகும் பின்னணி தகவல்கள்!

ilaiyaraja and manirathnam
ilaiyaraja and manirathnam Image source:indianexpress
Updated on

தமிழ் சினிமாவின் இரண்டு மாபெரும் ஜாம்பவான்களான இசையமைப்பாளர் இளையராஜா (1943) மற்றும் இயக்குனர் மணிரத்தினம் (1956) ஆகிய இரு பெரும் சினிமா புகழ் பெற்ற, சாதனைகள் பல படைத்த, இந்திய திரை உலகத்திற்கு காலத்தால் அழியாத பல கிளாசிக் படைப்புகளைத் தந்த இந்த இணை சினிமா வரலாற்றில் ஒரு பொற்காலத்தையே உருவாக்கியது என்று சொன்னால் மிகையாகாது.

இசைஞானி இளையராஜா:

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான 'இசைஞானி' இளையராஜா தனது 83வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். உண்மையான பிறப்பு ஜூன் 3 என்றாலும், கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 2ஆம் தேதியே தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் மற்றும் அலுவலகம் முன்பு திரண்ட ரசிகர்கள், பாடல்களைப் பாடியும், கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அவரது திரையுலகப் பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் திரையுலகில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மேல் இசையமைத்து, உலக அளவில் தமிழர்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்தவர் இவர். 1,400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, 7,000க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார். 1976இல் 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் அறிமுகமாகி 5 முறை தேசிய விருதுகளை வென்றவர். இவருடைய பிறந்த நாளை ஒட்டி திரைத்துறையினரும், உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களும் இளையராஜா குறித்த தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வழியே பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,

இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.

அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.

ராஜா என்றும் ராஜாதான்!

முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து :

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.

உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இயக்குனர் மணிரத்னம்:

இந்திய சினிமாவின் முகத்தையே மாற்றியமைத்த பெருமைக்குரியவர். காட்சி மொழி(Visual storytelling) மற்றும் நேர்த்தியான திரைக்கதை மூலம் உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை எடுத்துச் சென்றவர். 'மௌன ராகம்', 'நாயகன்', 'தளபதி', 'ரோஜா', 'பம்பாய்' எனப் பல பிரம்மாண்டமான படைப்புகளை இயக்கியுள்ளார்.

தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குனர் மணிரத்தினம், தமிழ் சினிமாவில் யதர்த்தமான கதைக்களம், நேர்த்தியான திரைக்கதை, பிரம்மாண்டமான இயக்கம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, தலைமுறைகளைக் கடந்து பல ரசிகர்களைக் கவர்ந்தவர் இவர். மணிரத்னம் தனது முதல் படமான கன்னடப் படம் 'பல்லவி அனுபல்லவி' தொடங்கி, தளபதி (1991) வரை இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மௌன ராகம், நாயகன், அஞ்சலி போன்ற படங்களில் இவர்களது கூட்டணியில் உருவான பாடல்கள் இன்றும் என்றென்றும் நிலைத்திருக்கும் இசையாகும்.

'பொன்னியின் செல்வன்', 'அலைபாயுதே' போன்ற பல காவியங்களை உருவாக்கிய இவர் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் அன்போடு 'மணி சார்' என்று அழைக்கப்படும் இவர், இந்திய அரசின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ ' உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். அவருடைய இணையற்ற படைப்புகளைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்,

ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, தணியாத தாகத்துடன் சினிமாவை அணுகும் இயக்குநர் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

அவரது பேரார்வம், புதிதாக வரும் இளைஞர்களுக்கும் பாடம்!

மனித மனங்களின் ஆழத்தை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் மேலும் பல படைப்புகளைத் திரு. மணிரத்னம் அவர்கள் வழங்கி மகிழ்விக்க விழைகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com