நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படமான ட்ரெயின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
மக்கள் செல்வனான நடிகர் விஜய்சேதுபதி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இவரின் அசாத்திய நடிப்பால் பல முன்னணி நடிகர்களுக்கு தற்போது வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். ரஜினி, விஜய், கமல், ஷாருக்கான் ஆகிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து கலக்கிய நடிகர் விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கினுடன் கைக்கோர்த்து ட்ரெயின் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை தமிழ் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே ட்ரெயின் என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக விஜய்சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய்ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிரித்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தனது இசை திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்க கலை இயக்கத்தை மாயபாண்டி மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.