

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (வயது 90) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
கொச்சி எலமக்கரையில் உள்ள மோகன்லாலின் இல்லத்தில் அவர் உயிரிழந்தார். சாந்தகுமாரி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. இந்தச் செய்தி மலையாளத் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.சாந்தகுமாரி கணவர் விஸ்வநாதன் நாயர் முன்னதாகவே இறந்துவிட்டார், அதே நேரத்தில் அவரது மூத்த மகன் பியாரிலால் 2000 ஆம் ஆண்டில் இறந்தார்.
சாந்தகுமாரி அவர்கள் மோகன்லாலின் வாழ்க்கையில் பெரும் தூணாக விளங்கியவர். மோகன்லால் தனது பல்வேறு நேர்காணல்களில், தனது தாயார் தன் மீது காட்டிய அன்பையும், தனது வளர்ச்சிக்கு அவர் அளித்த ஊக்கத்தையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு சாந்தகுமாரி அவர்களுக்கு பக்கவாதம் (Stroke) ஏற்பட்டதில் இருந்து, மோகன்லால் தனது தாயாரை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தார். படப்பிடிப்புகள் இல்லாத நேரங்களில் பெரும் பகுதியைத் தனது தாயாருடனேயே அவர் செலவிட்டு வந்தார்.
சாந்தகுமாரி அவர்களின் மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் வாயிலாக மோகன்லாலின் ரசிகர்களும் தங்களது ஆறுதல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில், மோகன்லால் தனது தாதாசாகேப் பால்கே விருதை தனது தாயாருடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது ஒரு பெரிய அதிர்ஷ்டம் என்று கூறியிருந்தார், மேலும் இந்த விருதைப் பற்றி அறிந்த பிறகு தான் முதலில் சந்தித்தது அவர்தான் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.