
சொந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தப்படும் மக்களின் அரசியலை பேசும் படமாக பராரியை உருவாக்கியுள்ளதாக இயக்குனர் எழில் பெரியவேடி தெரிவித்துள்ளார்.
குக்கூ, ஜோக்கர், ஜிப்சி, ஜப்பான் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜமுருகன் மற்றும் எஸ் பி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது பராரி திரைப்படம். இத்திரைப்படத்தை ராஜு முருகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எழில் பெரியவேடி இயக்கியுள்ளார்.
தோழர் வெங்கடேசன் படத்தில் நடித்த ஹரிசங்கர் பராரி திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். புதுமுக நடிகரான சங்கீதா கல்யாண் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். ஜான் ரோஸ்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். வாய்தா, முந்திரிக்காடு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த புகழ் இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
பராரி திரைப்படம் குறித்து படத்தினுடைய இயக்குனர் எழில் பெரியவேடி தெரிவித்திருப்பது, பராரி என்பது சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு நகர்த்தப்படும் மக்களைக் குறிக்கும் சொல்லாகும். இப்படத்தின் கதையை திருவண்ணாமலை மாவட்டத்தை சுற்றி இருக்கும் மக்களினுடைய வாழ்க்கையை உணர்த்துவதாக இருக்கும்.
அந்த எளிய மக்களினுடைய அரசியலை பேசும் படமாக பராரி உருவாகியுள்ளது. மேலும் சாதி, மதம், மொழி, இனம் என்ற பெயரில் நடக்கும் சமகால அவலங்களை இப்படம் எடுத்துரைக்கும். சமகால அவலங்களை கொண்டு அரசியல் செய்யும் மனிதர்களை அறத்தோடு கேள்வி கேட்கும் விதமாக இப்படத்தை உருவாக்கி உள்ளோம்.
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் பெங்களூர் பகுதிகளில் 45 நாட்களில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.இந்த நிலையில் இப்படத்தினுடைய பெயரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.