பொன்னியின் செல்வன் படத்தை இணையத்தில் வெளியிட தடை; சென்னை உயர்நீதிமன்றம்!

Ps-1
Ps-1

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின்செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் 2 பாகங்களாக இயக்கியுள்ளார். அதன் பொன்னியின்செல்வன் முதல் பாகம் இன்று நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. உலக நாடுகள் சிலவற்றிலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை படித்த மக்களும் , புத்தகத்தை படிக்காத மக்களும் இத்திரைப்படம் குறித்து ஆர்வமாக காத்திருந்தனர்,

மிகவும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும் இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, நடிகை த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘ பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம்
சட்டவிரோதமாக 2405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதனை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட்டால், அப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு  பெருத்த நஷ்டம் ஏற்படும். மேலும் திரைக் கலைஞர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் எனவும் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி எம்.சுந்தர் “ பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை விதிக்கப் படுகிறது. அவ்வாறு முறைகேடாக இந்த படத்தை இணைய தளங்கள் வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com