
நடிகர் தனுஷ் மூத்த மகன் நேத்ரா போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
நடிகர் தனுஷும், அவரது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் சேர்வார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறினார். இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் வசிக்கும் தனுஷின் மகன்கள் இருவரும் தனுஷ் வீட்டிலும் ரஜினி வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், சமீபத்தில் தனுஷின் வீட்டுக்கு வெளியே அவரது மூத்த மகன், அதிகவேக சூப்பர் பைக் ஒன்றை ஓட்டக் கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. 17 வயதாகும் அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதை சமூக வலைதளங்களில் பலரும் கண்டித்தனர்.
இதனையடுத்து, தனுஷின் வீட்டுக்குச் சென்ற போக்குவரத்து போலீசார், தனுஷின் மகனுக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். இந்த விவகாரத்தில் தனுஷின் மகன் அவரது வீட்டுக்கு பக்கத்திலேயே பைக் ஓட்டக் கற்றுக் கொள்வது தவறா என்று அவருக்கு ஆதரவாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.