பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் இளையராஜா பயோபிக்கில் தனுஷ் நடிப்பது அதிகாரப்பூர்வமானது. இதனையடுத்து, ரஜினிகாந்த் பயோப்பிக்கின் ஸ்க்ரிப்ட் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன என்ற செய்திகள் வந்தன. அண்ணாமலை பயோபிக்கில், அவரது கதாப்பாத்திரத்தில் விஷால் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், விஷால் கிட்டத்தட்ட படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு பயோபிக் அறிவிப்பு வந்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்க்கை வரலாற்றில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
கோலிவுட்டின் முன்னணி நடிகரான சத்யராஜ் இதுவரை பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். வில்லன், ஹீரோ என அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடித்து பட்டையை கிளப்பிய இவர், பாகுபலி கட்டப்பாவாக 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமானார். அதன்பின்னர் மீண்டும் சினிமாவில் தரமான படங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘அன்னபூரணி’ ஆகிய படங்களிலும் இவரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பரவலாகப் பேசப்பட்டது. அடுத்ததாக அவரது நடிப்பில் ‘வெப்பன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு பெரியார் ஈ.வே.ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படத்தில் நடித்திருந்தார் சத்யராஜ். அந்தப் படத்துக்கு ‘பெரியார்’ என தலைப்பிடப்பட்டிருந்தது. தற்போது அவர் பிரதமர் மோதி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடிப்பில் ‘PM Narendra Modi’ என்ற படம் வெளியானது. அதே ஆண்டு, ‘Modi: Journey of A Common Man’ என்ற வெப்சீரிஸ் ஒன்று வெளியானது. இப்படியாக ஏற்கனவே பிரதமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமும் வெப்சீரிஸூம் வெளியாகி இருக்கின்றன. ஆனால், தென்னிந்தியாவைப் பொறுத்தவரை அந்தப் படம் ஹிட்டாகவில்லை. அதேபோல் சீரிஸும் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றே கூற வேண்டும்.
முன்பைவிட, இப்போதுதான் பிரதமர் மோதியைப் பற்றி அனைவரும் தெரிந்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதேபோல் சிறு பிள்ளைகளின் மனதில் கூட இப்போதுதான் அவர் பெயர் பதிவாகியிருக்கிறது.
அந்தவகையில் இந்தப் படத்தைப் பற்றிய தகவல் கசிந்ததுமே தென்னிந்தியா முழுவதும் இது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.