நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா இந்த ஆண்டு +12 பொது தேர்வு எழுதியுள்ள நிலையில் இவரது மதிப்பெண் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஜோடியாக திகழ்ந்து வருபவர்கள் தான் சூர்யா - ஜோதிகா. பல வருடங்களாக காதலித்து வந்த இந்த தம்பதி பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமானதும் திரையுலகை விட்டு ஒதுங்கிய ஜோதிகா, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் மீண்டும் தன்னுடைய நடிப்பு கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான 'ஷைத்தான்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சூர்யாவும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் கங்குவா படத்திற்காக ரசிகர்கள் பலரும் காத்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்திலும் படம் நடிக்கவுள்ளார். இப்படி அடுக்கடுக்காக படங்களை கையில் வைத்திருக்கும் சூர்யாவிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார் அவரது மகள் தியா.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா மற்றும் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் மும்பைக்கே சென்று செட்டில் ஆனார். தன்னுடைய பிள்ளைகள் இருவரையும், மும்பையில் உள்ள பல கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் படிக்கும் திருபாய் அம்பானி பள்ளியில் தான் படிக்க வைத்து வருகிறார். அவ்வபோது குழந்தைகளின் வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.
இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் ப்ளஸ் 2 ரிசல்ட் வெளியானது. அதன் படி மும்பையில் 12ஆம் வகுப்பு படித்து வந்த சூர்யா - ஜோதிகாவின் மகள் தியாவும் பொதுத்தேர்வு எழுதியிருந்தார். தற்போது அதன் ரிசல்ட் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
அதாவது தியா, 600 மதிப்பெண்களுக்கு, 581 மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழில் 96 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்ணும், கணக்கில் 94 மதிப்பெண்ணும், பிசிக்ஸில் 99 மதிப்பெண்ணும், கெமிஸ்ட்ரியில் 98 மதிப்பெண்ணும், கம்பியூட்டர் சயின்ஸில் 97 மதிப்பெண்களை எடுத்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் சூர்யாவின் மகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே சூர்யாவின் மகள் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி, அத்லெட்டிக்ஸ் ஓடிய காட்சிகள் எல்லாம் இணையத்தில் வைரலாகின. மேலும் அதில் அவர் வெற்றி பெற்று பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.