கடைசி நேரத்தில் 'மாமன்னன்' படத்துக்கு வந்த சிக்கல்! படம் வெளியாகுமா!?

கடைசி நேரத்தில் 'மாமன்னன்' படத்துக்கு வந்த சிக்கல்! படம் வெளியாகுமா!?

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநித நடித்துள்ள படம் 'மாமன்னன்'. இப்படம் வருகிற ஜூன் 29-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படத்திற்கு புதிய சிக்கல் உருவாகும்படியாக, ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 3வதாக உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதியுடன், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படத்தில், நடிகர் வடிவேலு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், நடிகர் உதயநிதி முழு நேர அரசியலில் ஈடுபடவிருப்பதால், இப்படம்தான் தனக்கு கடைசி படமாக அமையும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், மாரி செல்வராஜ்-உதயநிதி கூட்டணி மற்றும் வடிவேலுவின் வித்தியாசமான தோற்றம் என இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையடுத்து 'மாமன்னன்' படம் இம்மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவின் படி, 2018ம் ஆண்டு கே.எஸ். அதியமான் இயக்கத்தில், உதயநிதி, ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் 'ஏஞ்சல்' என்ற படம் தயாரிக்கப்பட்டு, படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதகாவும் கூறியுள்ளார்.

இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், 'ஏஞ்சல்' படத்தை நிறைவு செய்யாமல், 'மாமன்னன்' படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்காக பல கோடி செலவிட்டுள்ள நிலையில், இப்படத்தை முடிக்காமல், 'மாமன்னன்' படத்தை வெளியிட்டால், தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதனால், 'ஏஞ்சல்' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை அவர் முடித்துத் தரவேண்டும் எனவும், அப்படி இல்லாவிட்டால் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக உதயநிதி வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதுவரை, அவர் 'மாமன்னன்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com