
தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள கங்கா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையெ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1983ஆம் ஆண்டு டி.ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான 'உயிருள்ளவரை உஷா' திரைப்படத்தில் நடித்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் கங்கா.சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ’கரையைத் தொடாத அலைகள்’, ’மீண்டும் சாவித்திரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என பல படங்களில் நடித்த கங்கா, சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
திருமணம் செய்துகொள்ளாமல் தனது சகோதரர் மற்றும் குடும்பத்துடன் கங்கா வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 63 வயதான கங்காவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இன்று உயிரிழந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 90ஸ் கால ரெமோவாக வலம் வந்த அவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் கங்காவின் இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.