இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போவதில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகின் உச்ச பட்ச நட்சத்திரமாக திகழ்பவர் விஜய் சேதுபதி. மிக சிறந்த நடிப்பு திறமையால் பாராட்டுக்களை மட்டுமல்லாது தனது திரைப்படங்களின் வசூல் ரீதியான வெற்றிக்கும் காரணமாக இருக்கிறார்.
அதே நேரம் விஜய் சேதுபதி கதாநாயகன் என்பதை தாண்டி வில்லன் கதாபாத்திரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குகிறார். இவர் வில்லனாக நடித்த திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் ஹீரோவுக்கு இணையாக பேசு பொருளாக மாறியது என்பதும் தனி சிறப்பு. இதனால் தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களான ரஜினியின் பேட்ட திரைப்படத்திலும், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும், கமலின் விக்ரம் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து பாராட்டுகளைப் பெற்றவர்.
இதன் தொடர்ச்சியாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இதன் தொடர்ச்சியாக இனி மேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
ஜவான் திரைப்படத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் விஜய் சேதுபதி இந்த முடிவை எடுத்திருப்பதாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பேசி வந்தனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது, பல கதாநாயகர்கள் என்னை அவர்களது படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை ஏற்றுக் கொண்டு நான் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறேன்.
வில்லன் கதாபாத்திரத்தின் அடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வில்லனாக நடிப்பதில் நிறைய அழுத்தம் ஏற்படும். ஹீரோவை விட வில்லனாக நடிப்பவர் வலுவாக தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து கவனித்து நடிக்க வைப்பார்கள்.
நான் வில்லனாக நடித்த படங்களில் இருந்து நிறைய காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இது போன்ற காரணங்களால் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.