

தினமும் ஐம்பது ரூபாய்க்கு எடுபிடி வேலை செய்த நபர், இன்று 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் பான்- இந்திய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். இதில் மிகவும் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவென்றால், அந்த நடிகர் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற ஹிந்தி,தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இருந்து உருவாகவில்லை என்பதுதான். இன்று பான் இந்தியா திரைப்படங்களில் கன்னட திரையுலகம் சேர்ந்துள்ளது என்றால், அதற்கு இவரது எழுச்சியே மிக முக்கியமான காரணம்.
10 கோடி ரூபாய் வசூல் செய்தால், மிகப்பெரிய வெற்றி என்று கருதப்பட்ட கன்னட திரையுலகில், 1000 கோடி ரூபாய் வசூல் என்பது அவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அவர்களின் அதிகபட்ச மார்க்கெட் ₹20 கோடியை அதற்கு முன் தாண்டியதில்லை. அதற்கு சாண்டல்வுட் என்று அழைக்கப்பட்ட கன்னட மொழி திரைப்படங்கள் , அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் அறிமுகம் பெறாததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கன்னட மொழியை விட, மலையாளம் பேசுபவர்கள் மிகவும் குறைவு என்றாலும், மலையாளத் திரைப்படங்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாக இருந்தன. கன்னட திரைப்படங்கள் அண்டை மாநிலத்தை ஈர்க்கும் அளவிற்கு இல்லாதது பெரும் காரணம். தென்னிந்திய மொழிகளில் மிக குறைவான மார்க்கெட் கொண்ட சாண்டல்வுட்டை , தேசிய அளவில் கொண்டு சேர்த்ததில் கே ஜி எஃப் நாயகன் யாஷிற்கு முதல் பங்கு உண்டு.
இன்று யாஷ் இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு நடிகராக சிறப்புடன் இருக்கிறார். உலகின் அதிக பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். ஹாலிவுட்டிற்கே சவால் விடும் இந்த மிகப்பெரிய படத்திற்கு , யாஷ் மட்டுமே ராவணன் கதாபாத்திரத்திற்கு ஒரே தேர்வாக இருந்துள்ளார். ராவணன் கதாபாத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு நபர் நடித்தால்தான், ராமர் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை பார்வையாளர்கள் உணர முடியும்.
வில்லனாக நடிக்க விருப்பமில்லாத யாஷை தொடர் பேச்சு வார்த்தைகள் மூலமும் 100 கோடி ரூபாய்க்கும் அதிக சம்பளம் கொடுத்து அவரை சம்மதிக்க வைத்துள்ளனர். யாஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி தவிர வேறு யாரும் கன்னட திரையுலகில் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸை நெருங்காத நிலையில், அவரது இந்த சம்பளம் கன்னட திரையுலகினரை மிரள வைத்துள்ளது.
யாஷ் எளிமையாக இந்த இடத்திற்கு வரவில்லை. நவீன் குமார் கவுடா என்ற பெயரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், சினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் கையில் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பெங்களூர் வந்த நவீன் , பி.வி. காரந்த் பெனகா நாடக குழுவில், டீ பரிமாறுவது, இடத்தை சுத்தம் செய்வது போன்ற சிறிய வேலைகளை 50 ரூபாய் தினசரி சம்பளத்திற்காக செய்து வந்தார். அத்துடன் தனது சினிமா ஆர்வத்தை கைவிடாமல் முயற்சி செய்து, சின்னத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
வெள்ளித்திரையில் துணை வேடங்களில் நடித்து வந்த அவருக்கு 2008 ஆம் ஆண்டில் 'ராக்கி' திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு முன்னணி கதாநாயகனாக உருவெடுத்த யாஷிற்கு KGF முதல் பாகம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. முதல் முறையாக கன்னட திரைப்படம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. கன்னட சினிமாவின் முதல் பான் இந்தியா வெற்றியைப் பெற்ற திரைப்படமாகவும் மாறியது.
KGF முதல் பாகம் 280 கோடி ரூபாய் வசூலை குவித்த நிலையில், அதன் இரண்டாம் பாகமான KGF -2 திரைப்படம் 1200 கோடி ரூபாய் வசூல் என்ற இமாலய இலக்கையும் அடைந்தது. மிகப்பெரிய வெற்றி பெற்றும் யாஷ் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பதை விட நிதானமாக திரைப்படங்களை தேர்வு செய்கிறார். தற்போது அவர் நடித்து முடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது.