கரூர் மாவட்ட ஆட்சியரான ர் பிரபு சங்கர் கிடார் இசைத்தபடி, புஷ்பா படப் பாடலை பாடியபடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் அல்லுஅர்ஜுன் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் புஷ்பா. இத்திரைப்படத்தின் பாடல்கள் தமிழ், தெலுங்கில் பிரபலமாயின. குறிப்பாக நடிகை சமந்தா நடனத்துடன் வெளியான 'ஊம் சொல்றியா மாமா..' பாட்டு சூப்பர் ஹிட் ஆகியது. இதே புஷ்பா படத்தில் ''பார்வை கற்பூர தீபமா.. பேச்சே கல்யாணி ராகமா..'' என்ற பாடல் தமிழிலும், ''பங்கார மாயனே.. ஸ்ரீவள்ளி..'' என்று தெலுங்கிலும் பாடகர் ஸ்ரீசித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.
இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கிடார் இசைத்த வண்ணம் இப்பாடலை தெலுங்கில் பாடி 1.39 நிமிடம் கொண்ட காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்றிரவு பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் பிரபுசங்கர் தெரிவித்ததாவது:
கடைசியில் நானும் ஸ்ரீவள்ளி பாடலை இசைத்துள்ளேன்.
தெலுங்கு புஷ்பா திரைப்படத்தில் சித்ஸ்ரீராமின் 'ஶ்ரீவள்ளி' பாடல் ஒரு மைல்கல். நானும் ஸ்ரீவள்ளி பாடலை இசைக்க முயற்சித்துள்ளேன். எனக்கு தெலுங்கு தெரியாது என்பதால், இந்த என்னுடைய தெலுங்கு பாடலில் தவறுகள் ஏதேனும் இருந்தால், தெலுங்கு பாடகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
-இவ்வாறு குறிப்பிட்டு டிவிட்டரில் அவர் தனது வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
இதைப் பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும், தீராத பணிச் சுமைகளுக்கு இடையே இப்படி ரிலாக்ஸாக பாடுவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று கருத்துகள் பதிவிட்டு வருகின்ற்னர்.