இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸிகள் பயன்பாட்டை முறைப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற வட்டாரத்தில் வெளியான தகவல்:
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பிறகு கிரிப்டோ கரன்ஸியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. சுமார் 1.5 கோடி பேர் கிரிப்டோ கரன்ஸியில் ரூ.40 ஆயிரம் கோடிக்குப் பணம் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் கிரிப்போட கரன்ஸிகள் மூலம் தீவிரவாதிகளுக்குப் பணம் செல்ல வாய்ப்புண்டு என அண்மையில் பிரதமர் மோடி பேசினார். மேலும் இதுகுறித்து கடந்த வாரம் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கிரிப்டோ கரன்ஸி இந்திய நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கக் கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கவலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸிக்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்ஸி தடை குறித்தும் டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை மத்திய மத்திய அரசு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.