மலைகளின் அரசி ஊட்டி;  200-வது ஆண்டுவிழா கொண்டாட்டம்!

மலைகளின் அரசி ஊட்டி;  200-வது ஆண்டுவிழா கொண்டாட்டம்!

-தனுஜா ஜெயராமன்

மலைகளின் அரசியான ஊட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் உதகமண்டலம் நீலகிரியில் உருவாகி இன்றோடு (ஜூன் 1)  200 வருடங்களாகிறது. இந்த 200-ம் ஆண்டு விழாவினை கொண்டாடி மகிழ்கிறது ஊட்டி.

சென்னையை தலைநகராக கொண்ட தமிழகத்தை ஆண்ட ஆங்கிலேயர்களால் சென்னையின் கோடை வெம்மையை தாங்க இயலாமல் நிர்மாணித்த நகரே உதகமண்டலம் . அக்காலத்தில் ஊட்டி சென்னையில் கோடை தலைநகரமாக விளங்கியது என்றால் மிகையில்லை.

ஊட்டி நகரை நிர்மாணித்ததில் அப்போது கோயமுத்தூர் மாவட்டத்தில் கலெக்டராக இருந்த ஜான் சுலிவன் என்பவரின் பங்கு மிகப் பெரியது. கோடையின் வெம்மையை தாங்க இயலாத ஜான் சுலிவன், 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜூன் மாதத்தில்தான் ஊட்டி நகரை நிர்மாணித்தார்.

ஏறக்குறைய இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையை ஒட்டிய நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரை ஏற்படுத்த அவர் விரும்பினார். ஊட்டி கடல்மட்டத்திலிருந்து 7347 அடி உயரத்தில் அமைந்துள்ளதாலும் எப்போதும் குளுமையான வானிலை நிலவுவதாலும் இப்பகுதி கோடைவாசஸ்தலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

 ஜான் சுலிவன் முதன்முதலாக அங்கு தங்குவதற்கான ஒரு பெரிய கட்டிடத்தை கட்டினார். அது தற்போதும் ஜான் சுலிவன் மெமொரியல் ஹால் என்ற பிரமாண்ட மாளிகை வரலாற்று சாட்சியாக நிமிர்ந்து நிறகிறது. அங்கு  ஜான் சலிவனுக்கு சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.  ஊட்டி நகரின் தரமான நேர்த்தியான சாலைகள் அமைப்பும், அழகிய பூங்காக்கள் , ப்ரம்மாண்டமான பொட்டானிக்கல் கார்டன் , படகு துறை என அனைத்திலுமே ஜான் சுலிவனின் பங்கு அலாதியானது.

மேலும் அங்குள்ள பழங்குடியினரின் உதவிகொண்டே அவர் அந்த நகரை அழகுற நிர்மாணித்தார் என்று சொல்லப்படுகிறது. அதற்கு நன்றிக்கடனாக கல்வியில் பின்தங்கிய அப்பகுதி மக்களின் எதிர்கால வளர்ச்சிக்காக கல்விகூடங்களை அமைத்தார் ஜான் சுலிவன்.

தற்போது அந்த உதகை உருவான  நினைவாக அதன் இருநூறாவது ஆண்டு விழா மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.  மலைகளின் அரசி என்ற பட்டத்துடன் ஏராளமான சுற்றுலா தளங்களை உருவாக்கி  புதுப்பிக்கப்பட்டு நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்களை கவர்ந்து வருகிறது ஊட்டி என்கிற உதகமண்டலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com