சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் உள்ளிட்ட பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்தினால்தான், சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதைச் சார்ந்த இணைப்பு கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், தங்களது கட்டணத்துடன் ஒவ்வொரு சேவைக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். இந்த வரித்தொகை அரசுக்கு செலுத்தப்படும்* ஒவ்வொரு மாணவரும், பட்டப்படிப்பு முடித்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை கட்டணத்துடன் கட்டாயம் செலுத்த வேண்டும் மேலும் 'டூப்ளிகேட்' சான்றிதழ், இடமாற்று சான்றிதழ், செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவது, சான்றிதழின் உண்மைத்தன்மை சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கும், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். ஆனால் கல்வி கட்டணம், செமஸ்டர் தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு, டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ் பெறுவது, தர வரிசை, பயிற்று மொழி, சதவீத மாற்று மதிப்பெண் சான்றிதழ், புரொவிஷனல் சான்றிதழ்ஆகியவற்றுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
–.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.