– பி.ஆர்.முத்து, சென்னை
இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்
இளைஞர்கள் அதிக விழுக்காடுகள் உள்ளனர் என்று
இறுமாந்திருந்தோமே… விரைவில் அவர்களைக் கொண்டு
இந்தியாவை வல்லரசாக மாற்றுவோம் என எண்ணியிருந்தோமே!
எதிர்பாராத தொற்றுநோய்தான் வந்து நம் கனவுகளை
எல்லாம் சீர்குலைத்து விட்டதை எண்ணி மனம் திகைக்கின்றதே…
எங்கள் குழந்தைச் செல்வங்கள் பழையபடி பள்ளி, கல்லூரிக்குச் செல்வதும்
ஏற்றம் தரும் செய்முறைப் பயிற்சிகளை அங்கே கற்று உணர்வதும் எப்போது?
கணினி மூலம் கற்றல் திறனை வளர்த்துக்கொள்ளலாம் என்றாலும்
கல்வி வளாகத்தினுள் சென்று ஆசிரியரிடம் பயிலும் கல்விக்கு ஈடாமோ?
கவினுரும் நண்பர்களின் முகம் பார்த்து கதை பல பேசிடும் சுவைக்கு இணையேது?
காலப்போக்கில் கைகொண்டு எழுதும் கலையும் கடினமானது ஒன்றாகிவிடுமோ?
நடமாட்டம் குறைந்து நான்கு சுவற்றிற்குள் முடங்கி
நாற்காலியில் அமர்ந்து நாளெல்லாம் கணினியை உற்று நோக்கும்
நம் குழந்தைகளின் உடல் நலனும் மன வளமும் சீராவ தெப்போது?
நல்லதொரு மாற்றம் வரவேண்டும் இளைஞர்கள் வாழ்வு மலர வேண்டும்!