இல்லதரசிகளுக்கு இலகுவான சேமிப்பு வழிமுறைகள்!

இல்லதரசிகளுக்கு  இலகுவான சேமிப்பு வழிமுறைகள்!

தமிழ்யா சுப்ரமண்யன்

தீபாவளி போனஸ் பலருக்கும் கைக்கு வந்திருக்கும் சமயம் இது! வீட்டில் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் பெண்களுக்குத்தானே சேமிப்பின் அருமையும் தெரியும். ஆனாலும் அஞ்சரைப் பெட்டி தாண்டி வேறெந்த முறைகளில் சேமிக்கலாம்?

பெண்கள் பொதுவாக தங்கம், வெள்ளியில் பணத்தை முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால் சேமிப்பு என்றால் தங்கம் மட்டும்தானா ? வீட்டில் இருக்கும் பெண்கள் முதல் பணிக்கு செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் பயனுள்ள வகையில் என்னென்ன இருக்கிறது என்று முதலீட்டு ஆலோசகர் திருமதி சங்கீதா அவர்களுடன் பேசியபோது..

முதலீட்டு ஆலோசகர் சங்கீதா.

"சேமிப்பு என்ற வார்த்தையே பாசிடிவ் அதிர்வலைகளை உருவாக்கும். சேமிப்பு என்பது ஏதோ உபரியான பணத்தை எடுத்து வைப்பது மட்டுமல்ல.. அது ஒரு முதலீடும்கூட! கொஞ்சம் கொஞசமாக நாம் சேமிக்கும் தொகை பெருகி அதன்மூலம் நமக்கு வட்டி, ஈவுத்தொகை, லாபத்தில் பங்கு என கூடுதல் வருவாயை கொடுத்தால் அது முதலீடு. அப்படி பென்அல் என்னென்ன வகையில் சேமிப்பு, முதலீடு செய்ய முடியும் என்று பார்ப்போம்.

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் :

இன்றைய நிலையில் ஒரு சிறந்த பாதுகாப்பான சேமிப்புத்திட்டம் என்றால் அது அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் எனலாம். இன்று வங்கிகள், சேமிப்பு முதலீட்டு மையங்கள் என பல வரிசைக்கட்டி நின்றாலும் பாமர மக்களின் பெஸ்ட் சாய்ஸ் இது.சாதாரண சேமிப்பு திட்டம் முதல், மாதாந்திர இலக்குடன் கூடிய சேமிப்புத்திட்டம், தேசிய சேமிப்புதிட்டம், பெண்கள், பணிசெல்வோர், ஓய்வூதியதாரர்கள் என பல்வேறு மக்களுக்கு ஏற்ப 4% முதல் 7 % வரையில் ஆண்டுக்கு வட்டி கிடைக்கும் வகையில் சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. இந்த வட்டிவிகிதங்கள் சூழலுக்கு ஏற்ப மாறும். அருகில் உள்ள அஞ்சலகத்தை தொடர்புகொண்டு இந்த சேமிப்பை தொடங்கி பயன்பெறலாம்.

வங்கி சார்ந்த முதலீட்டு திட்டங்கள்:

வங்கியில் சாதாரண சேமிப்பு, ரெகுவரிங் டெபாசிட், பிக்சட் டெபாசிட் என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. இத்துடன் மியூசுவல் பண்ட், SIP எனப்படும் (Systematic Investment Plan) , பிராவிடண்ட் பண்ட் என பல வழிமுறைகள் இருக்கின்றன. தங்கத்தின் மீதான முதலீடுகளையே எடுத்துகொண்டாலும் அதில் இப்பொழுது டிஜிட்டல் முறையில் ஈடிஎப், தங்க பத்திரம் என்று புதிய வழிமுறைகள் இருக்கின்றன.

தங்கத்தில் ETF முதலீடு என்றால் என்ன ?

ETF (Exchange Traded Fund) என்பது பங்கு வர்த்தகத்தில் உங்களுக்கு பதிலாக உங்கள் பெயரில் வேறு ஒரு நிறுவனம் தங்கம் வாங்கி வைத்திருப்பதே ஆகும். Gold Bond, Digital Gold எல்லாம் இதே மாதிரிதான். தங்கம் விலை ஏறும்போது இங்கேயும் விலை ஏறும். சரியான நேரத்தில் பார்த்து சரியான நேரத்தில் விற்றால் இவை லாபகரமான முதலீடாக அமையும். நீண்ட நாட்கள் சேமிப்பு திட்டம்கொண்டவர்கள். அவசரத்தேவைக்கு தங்கத்தை அடமானம் வைக்கவோ விற்கவோ கூடிய சூழலில் இல்லாதவர்கள், தங்கத்தை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாதவர்கள் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

டிஜிட்டல் கோல்டு என்றால் என்ன ?

இதுவும் ETF போன்றதுதான் வழக்கமாக நாம் நகை வாங்கவேண்டுமெனில் கடைக்கு செல்கிறோம். அங்கு பணத்தை கொடுத்து நகையை கையோடு பெற்றுகொள்கிறோம். டிஜிட்டல் கோல்டு என்பது தங்கத்தின் மதிப்பில் நீங்கள் பணம் செலுத்தி ஒரு சான்றை பெற்றுகொள்வது. அதாவது தங்கம் உங்கள் கையில் இருக்காது அன்றைய தினத்தின் தங்கவிலையின் மதிப்பில் நீங்கள் வாங்கிய அளவுக்கான தொகைக்கு உங்களிடம் சான்று இருக்கும். தங்கம் விலையேறும் போது இந்த முதலீடும் விலையேறும். நல்ல விலைக்கு வரும் போது நீங்கள் விரும்பினால் அப்போதைய விலைக்கு இதைவிற்றுவிடலாம். நீங்கள் வாங்கி விலைக்கும் , விற்ற விலைக்கும் இடையேயான தொகையோ உங்களின் லாபம். இதை செய்து தர பல முகவர் நிறுவனங்கள் இருக்கின்றன . சின்ன சேவைக்கட்டணமுடன் இவர்கள் முதலீடு செய்ய உதவுகிறார்கள். எனினும் நம்பிக்கையான முகவர்களை தேர்ந்தெடுப்பதில் விழிப்புணர்வு அவசியம்.

இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட நிர்ணியித்த வகையில் மட்டுமே வட்டி மற்றும் ஈவுத்தொகை மூலம் உங்களுக்கு பணத்தை பெருக்கித்தரும்.

கொரோனா பேரிடர் காலத்தில் இன்னொரு முதலீட்டு முறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. அது பங்கு சந்தை சார்ந்த முதலீடு. பங்கு சந்தை என்றவுடன் அது சார்ந்த ரிஸ்க் நிச்சயம் நம் கண் முன்னால் நிற்கும்.

குறைந்த ரிஸ்குடன் சரியான முறையில் சேமிக்க பல வழிமுறைகள் பங்குசந்தையில் இருக்கின்றன. பங்கு சந்தை சார்ந்த மியுசுவல் பண்ட் மூலமாக 15% முதல் 24 % வரை கூட பாதுகாப்பான முறையில் நமது முதலீட்டை பெருக்கிகொள்ளலாம். ஆனால் பங்கு சந்தையில் இறங்கும் முன்பு அது குறித்த விழிப்புணர்வு அது சார்ந்த அறிவும் பெறுவது அவசியம். அப்படியில்லை எனில் ஒரு நம்பிக்கையான முதலீட்டு ஆலோசகரை பயன்படுத்திகொள்ளலாம்.

எதிர்கால இலக்கை கணக்கில் கொண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம், பிள்ளைகளின் கல்வி என அவர்களின் நீண்ட கால இலக்குவைத்து பல முதலீட்டுத்திட்டங்கள் வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் இருக்கினறன.அவற்றையும் நாம் கேட்டறிந்து சரியாக புரிந்துகொண்டு முதலீடு செய்யலாம்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு

என்கிறார் திருவள்ளுவர்

மொத்தத்தில் நீங்கள் சாதாரணமான வருவாயை ஈட்டினாலும் அதனை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யும் போது அதனை பெருக்கி அதன் மூலம் பெரும் பலன் அடைய முடியும்.

இவ்வாறு விளக்கமாக சொல்லி முடித்தார் முதலீட்டு ஆலோசகர் சங்கீதா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com