சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி முழு நிலவு நாளில் சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க நாசா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நாளை (நவம்பர் 19) நிகழ உள்ளது. சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படக்கூடிய நீண்ட சந்திர கிரகணம் இதுவே ஆகும். பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும். இந்த கிரகணம் நான்கு முக்கிய கட்டங்களில் நிகழும். இந்திய நேரப்படி காலை 11:32:09 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் மாலை 5.33 மணி வரை நீடிக்கும். அதாவது 6 மணி நேரம் 2 நிமிடங்கள் என நீடிக்கும். அதிகபட்ச கிரகணம் நேரும்போது, சந்திரனின் 97% பகுதியானது பூமியின் நிழலால் மூடப்பட்டு, அடர் சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். இந்த சந்திர கிரகணத்தை வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பகுதிகளில் காணக்கூடியதாகத் தெரியும்.
-இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.