தமிழகத்தில் சாலை விபத்துகளில் காயமடைபவர்களை காப்பாற்ற வழிசெய்யும் வகையில் 610 மருத்துவமனைகளில் 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தை இம்மாதம் 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றூம், விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவமனைகளில் முதல் 48 மணிநேரம் இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் சமீபத்தில் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவமனையில் 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தை டிசம்பர் 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இந்த திட்டம் 610 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட உள்ளது. சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திடம் உருவாக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும்.
–இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.