இறைவன் ஏற்கும் விசேஷ நிவேதனங்கள்!

இறைவன் ஏற்கும் விசேஷ நிவேதனங்கள்!
Published on

lகொல்லூர், ஸ்ரீ மூகாம்பிகைக்கு இரவு அர்த்த ஜாம பூஜையின்போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயமே நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

lசிதம்பரம், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமே நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

lஸ்ரீரங்கம், ரங்கநாதர் ஆலயத்தில் ஸ்ரீரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும், துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனம் செய்யப்படுகிறது.

lதிருவாரூர், ஸ்ரீ தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கே தினசரி நிவேதனம்.

lதிருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரையன் பொங்கல் எனும் அமுது படைக்கப்படுகிறது.

lகாஞ்சிபுரம், ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்தியம்.

lதிருப்பதி, ஸ்ரீ வேங்கடாசலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும், குலசேகரன் படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர் சாதம் மட்டுமே!

lதிருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஸ்ரீஆத்மநாதருக்கு புழுங்கலரிசி சோறும் பாகற்காய் கறியுமே நிவேதனம்.

lகேரள மாநிலம், கொட்டாரக்கராவில் அருளும் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக்கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

lஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு, 'முக்தாபி சூரணம்' எனும் மகாபிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்தப் பிரசாதம் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.

lகேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து, பின்னர் அதையே பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால், வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறதாம்.

lநவக்கிரக, சுக்ர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின்போது சுரைக்காய் நிவேதனம் செய்யப்படுகிறது.

lமதுரை, ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும், இரவில் பள்ளியறையின்போது கமகமக்கும் சுண்டலும், பாலும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

lநெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் அம்மனுக்கு நிவேதனம்.

lகேரளம், குருவாயூரில் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு சுண்டக் காய்ச்சிய பால் பாயசமே நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

lதிருச்சி, கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.

lகேரளம், இரிஞ்சலக்குடா பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயில் தயாரிக்கப்பட்ட, 'வழுதனங்கா' எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. செம்பை வைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு, தனது வயிற்று வலி நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

lகுற்றாலம், ஸ்ரீ குற்றாலநாதருக்கும், குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால் அவர்களுக்குத் தலைவலியும், ஜலதோஷமும் வாரமல் இருக்க இந்த ஐதீகம்.

lமுழு உளுந்தை ஊற வைத்து, பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசையே, மதுரை அழகர் கோயிலின் பிரதான பிரசாதம்.

lதிருநெல்வேலி, பூமா தேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம் பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டுத் தயாரிக்கப்படுவதுதான் இந்தக் கூட்டாஞ்சோறு.

தொகுப்பு : ஆர்.கெஜலட்சுமி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com