ஜெய் ஹிந்த்: நாட்டை நேசிப்பவர்களுக்கு பிடித்த வார்த்தை!

ஜெய் ஹிந்த்: நாட்டை நேசிப்பவர்களுக்கு பிடித்த வார்த்தை!

காந்திஜிக்கு கைராட்டையின் மீது இருந்த ஈடுபாடு நாடறிந்த ஒன்று. 1947-ல் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கும் இளவரசர் பிலிப்புக்கும் திருமணம் நடந்த போது அதற்கு பரிசாக காந்திஜி தன் கையால் நெய்த ஒரு நூலாடையைத்தான் (lace) பரிசாகக் கொடுத்தார். அந்த நூலாடையின் நடுவில் நெய்யப்பட்டிருந்த வார்த்தைகள் ஜெய்ஹிந்த் என்பது! அந்த பிரிட்டிஷ் அரச தம்பதியர் தங்களுக்கு வழங்கப்பட்ட வெகுமதியில் எதற்காக ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டன என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

ஜெய் ஹிந்த் என்பது ஏதோ இரண்டு வார்த்தைகள் அல்ல. அது எழுச்சி கோஷம். இந்தியாவின் சுதந்திரத்தோடு பின்னிப்பிணைந்த கோஷம். இந்தியனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நெருக்கமாக இருக்கும் – நெருக்கமாக இருந்த வேண்டிய – கோஷம்.

இதனால்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வெளியிட்ட முதல் அஞ்சல் தலையின் மேல் வலது மூலையில் ''ஜெய் ஹிந்த்'' என்ற வார்த்தைகள் இடம்பெற்றன. ''இந்தியா வாழ்க'' என்பதையும் ''இந்தியா வெல்க'' என்பதையும் ஒருசேர உணர்த்துகிறது ஜெய்ஹிந்த் என்ற வாசகம்! சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் பிரதமர் ஜவஹர்லால் நேரு அளித்த பிரபல உரைகூட இறுதியில் ஜெய்ஹிந்த் என்றுதான் முடிந்தது.

இந்த கோஷத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கினார் என்பது பொதுவான பிம்பம். ஆனால் உண்மை வேறு. ஜெய்ஹிந்த் என்பதை முதலில் உருவாக்கியவர் செண்பகராமன் பிள்ளை. விக்கிடி என்ற பெயரில் அதிகம் அறியப்பட்டவர். பிறந்தது திருவனந்தபுரத்தில் என்றாலும் அவரது பெற்றோர் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இளம்வயதிலேயே ஐரோப்பாவுக்குச் சென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.

இந்த கோஷத்தைப் பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் பரவலாக்கினார். அவருக்கு இந்த கோஷத்தை நினைவுபடுத்தியவர் அப்போது ஹைதராபாத் கலெக்டராக இருந்த ஜெய்னுல் ஆபிதீன் என்பவர். பின்னர் சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் மேஜராக விளங்கினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன் ராணூவப் படையை உருவாக்குவதற்கு முன் இந்தியர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது ஜெய் மா துர்கா, சலாம் அலைக்கும், ஸத் ஸ்ரீ அகல் என்பதுபோல அவரவர் மதத்தை நினைவு படுத்தும்படி முகமன் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் நேதாஜி தன் ராணூவத்தினர் ஒன்றிணைந்த பாரதப் பிரதிநிதிகளாக அனைவருக்கும் ஒரு மாதிரியான கோஷத்தைத் தேர்வு செய்ய விரும்பினார். அப்போது ஜெய்னுல் ஆபிதீன் 'ஜெய்ஹிந்த்' கோஷத்தை முன்வைக்க, சுபாஷ் சந்திர போஸுக்கு மிகவும் பிடித்துப் போனது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜெய் ஹிந்த் என்பது சுதந்திர நாட்டின் விடுதலைச் சின்னமாகவே ஆனது. இந்தியாவை ஆட்சி செய்த அத்தனை பிரதமர்களும் தங்கள் உரையில் ஜெய்ஹிந்த் என்று கூறுவதை வழக்கமாக்கிக் கொண்டனர். இந்திரா காந்தி தனது அரசியல் உரைகளின் இறுதியில் மூன்று முறை அடுத்தடுத்து ஜெய்ஹிந்த் என்று கூறி அந்த கோஷத்தை மக்களையும் எதிரொலிக்கச் செய்வார். பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பேதமின்றி பணிபுரியும் இந்திய ராணுவத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதெல்லாம் ஜெய்ஹிந்த் என்று கூறுவதை இப்போதும் கேட்கலாம்.

குஜராத் அரசும் மத்தியப் பிரதேச அரசும் சில வருடங்களுக்கு முன் பள்ளிச் சிறுவர்கள் வருகைப்பதிவேட்டின்போது ஜெய் ஹிந்த் என்று கூறுவதைக் கட்டாயமாக்கியது. இளம் வயதிலேயே தேசப்பற்றை கிடைக்க இது உதவும் என்று கருதப்பட்டது.

ஆக இந்தியாவை நேசிப்பவர்களுக்கு ''ஜெய்ஹிந்த்'' நிச்சயம் பிடிக்கும்.

*********

இன்குலாப் ஜிந்தாபாத்

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், கவிஞருமான மெளலானா அசரத் மோகானி என்பவர் 1921ம் ஆண்டில் இம்முழக்கத்தை உருவாக்கினார். இந்த முழக்கத்தை பகத் சிங் மற்றும் அவரது கூட்டாளியான பி.கே. தத் ஆகியோர் தில்லியில் உள்ள மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய பின் முழங்கினர். பகத் சிங் தனது உரை மற்றும் எழுத்துக்கள் மூலம் இதை தொடர்ந்து பிரபலப்படுத்தினார். இந்துஸ்தான் சோஷலிச குடியரசுக் கழகத்தின் அதிகாரபூர்வ முழக்கமாகவும், அகில இந்திய ஆசாத் முஸ்லிம் மாநாட்டின் முழக்கமாகவும் இது விளங்கியது. பின்னர் இந்திய சுதந்திர இயக்கத்தின் முழக்கங்களில் ஒன்றாகவும் மாறியது. சுதந்திர இயக்கத்தை விவரிக்கும் இந்திய அரசியல் நாவல்களில், இந்த முழக்கத்தை கதாபாத்திரங்கள் கூறுவதைக் காணமுடியும். இன்குலாப் என்பது உருது மொழியில் 'புரட்சி' என்பதைக் குறிக்கிறது. இன்குலாப் ஜிந்தாபாத் என்றால் புரட்சி வெல்க என்பது பொருள்.

வந்தே மாதரம்

இந்தியாவின் தேசியப் பாடல் என்று கருதப்படுகிறது வந்தே மாதரம், சுஜலாம் சுபலாம் என்று தொடங்கும் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வங்காள மொழிப் பாடல். தாய் நாடே வணக்கம் என்ற பொருள் கொண்ட வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் ஒரு சுதந்திரப் போராட்ட கோஷமாகவும் உயிர்பெற்றது. கவிஞர் பாரதியார் கூட இந்த வார்த்தைகளில் கரைந்து அதைத் தனது ஒரு பாடலின் தொடக்கம் ஆக்கினார். 'வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும்' என்போம் என்று தொடங்கும் அவரது பாடல் தேசிய உணர்ச்சியை வெகுவாக ஊட்டியது. பிரிவினைக்கெதிரான கூட்டங்கள் நடத்தப்பட்டாலும் இந்த கோஷம்தான் அங்கு முதன்மைப் படுத்தப் பட்டது. சுதேசி இயக்கத்திலும் இந்த கோஷம் மிக முக்கிய பங்கு வகித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com