நடிகர் சூர்யா தயாரித்து நடித்த 'ஜெய் பீம்' படம் ஓடிடி–யில் வெளியாகி பெரும் வெற்றியடைந்துள்ளது. இந்த படத்தை இயக்கியவர் த.செ.ஞானவேல். ஜெய் பீம் படமானது பழங்குடியினத்தை சேர்ந்த ராசாக்கண்ணு, பார்வதி ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகப் பட்டதாக இயக்குனர் தெரிவித்திருந்தார். தற்போது பார்வதி (படத்தில் செங்காணி கேரக்டர்) வறுமையில் வாடி வருகிறார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவைப் பார்த்தபின், பார்வதிக்கு வீடு கட்டித் தருவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது:
ராசாக்கண்ணு தான் செய்யாத குற்றத்துக்காக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதையும் அவர் மனைவி பார்வதி அம்மாள் வறுமையில் வாடுவதையும் அறிந்து மிகவும் வேதனையுற்றேன். அதனால் பார்வதி அம்மாளுக்கு என்னுடைய சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறேன். சுமார் 28 வருடங்களுக்கு முன் நடந்த கொடூரமான துயர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசும் பொருளாக்கிய ஜெய் பீம் படக்குழுவினருக்கு நன்றி.
–இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.