நடமாடும் மருத்துவமனை சேவை; மெரினாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கம்!

நடமாடும் மருத்துவமனை சேவை; மெரினாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் ரூ.70 கோடி செலவில் சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் உள்ள மலைபகுதி கிராமங்கள், தொலைதூர குக்கிராமங்கள் என அனைத்து பகுதிகளுக்கும், மக்கள் வசிக்கும் இடங்களுக்கே நேரடியாக மருத்துவ ஆம்புலன்ஸ்களை கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற இத்திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மலை கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் மருத்துவ முகாம்கள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.70 கோடி மதிப்பில் 389 சிகிச்சை வசதிகளுடன் கூடிய வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நடமாடும் மருத்துவ சேவை ஆம்புலன்சில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இடம்பெறுவர். இந்த நடமாடும் மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான  பரிசோதனை மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவைகள் இடம்பெற்றுள்ளன.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. மெரினாவில் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முதல்வருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com