நவீன உலகில் செல்போன் மோகம் தலைவிரித்து ஆடுவதால், 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் மற்றும் சர்வீஸ் செய்ய மாட்டோம் என செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் அசோசியஷன் அறிவித்துள்ளது.
-இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் அசோசியஷன் தெரிவித்தாவது:
நவீன உலகில் பள்ளி மாணவர்களிடையே செல்போன் மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாவதும், அஜாக்கிரதை மரணங்களும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் பிரச்சினை தீரவில்லை. இந்நிலையில் எங்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டத்தில் இதுகுறித்து சில தீர்மானங்கள் எடுக்கப் பட்டன. அதில் பெற்றோர் துணையின்றி தனியாக வரும் 18வயதிற்கு கீழ்ப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் மற்றும் செல்போன் சர்வீஸ் செய்து கொடுக்கக் கூடாது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் செல்போன்கள் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளோம்
-இவ்வாறு அவர்கள் கூறினர். மாணவர்கள் நலன் கருதி எடுக்கப் பட்ட இந்த முடிவு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.