ஆந்திராவில் அமைச்சர் ஆனார் நடிகை ரோஜா: புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு!

ஆந்திராவில் அமைச்சர் ஆனார் நடிகை ரோஜா: புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு!

ஆந்திர மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, நேற்று 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது. இந்த புதிய அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் பெற்றுள்ளது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது. இக்கட்சி 2019-ல் சட்டமன்றத் தேர்தலில் வென்றபோதே அடுத்த இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்றும் .புதியவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி அளித்தார். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் நடப்பதாகவிருந்த அமைச்சரவை மாற்றம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. உடனடியாக கவர்னர் பிஸ்வா பூ‌ஷன் அரிச்சந்திரனுடன் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 அமைச்சர்களும் தம் பதவிகளை கடந்த வியாழக்கிழமை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. தலைமைச் செயலகத்தை ஒட்டியுள்ள காலி மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்தது.புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பிஸ்வா பூ‌ஷன் அரிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் கடந்த முறை போலவே 5 துணை முதல்வர்கள் உள்ளனர். காப்பு சமுதாயம், பட்டியலினத்தவர், பழங்குடியினர், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் துணை முதல்வராக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நடிகை ரோஜா தமிழில், ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி படத்தில் அறிமுகமானார். பின்னர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நடிகை ரோஜா 1999-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2009-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைந்தார். தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏ. ஆனார். இந்நிலையில் தர்ஓது ஆந்திராவில் அமைச்சர் ஆகியுள்ளார் நடிகை ரோஜா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com