நானும் எம்.ஜி.ஆர் ரசிகன் தான்; முதல்வர் மு.க. ஸ்டாலின்!

நானும் எம்.ஜி.ஆர் ரசிகன் தான்; முதல்வர் மு.க. ஸ்டாலின்!

வேலூர் செண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வம் என்பவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பாரட்டுக் கடிதம் எழுதியதற்கு, அவரை போனில் அழைத்து முதல்வர் நன்றி தெரிவித்த ஆடியோ வைரலாகி வருகிறது

முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்துக்குச் சென்று பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்து விட்டு சென்னை திரும்பினார்.  இந்நிலையில் வேலூர் செண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது:

நீங்கள் வேலூர் வந்த போது எந்தவித போக்குவரத்து இடையூறும் இல்லாமல் நாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம். எங்கள் தொழில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. இவை அனைத்தும் உங்களின் உத்தரவின் பேரில்தான் நடந்திருக்கும் என்பதை அறிவேன். மேலும் எங்கள் மாவட்டத்துக்கு  பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதற்கு  நன்றி. உங்களுக்கு எம்ஜிஆரின் தீவிர ரசிகனான என்னுடைய வாழ்த்துகள்.

-இவ்வாறு அந்த ஆட்டோ டிரைவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அக்கடிதத்துடன் கலைஞரும் எம்ஜிஆரும் ஒன்றாக உள்ள புகைப்படம் மற்றும் எம்ஜிஆருடன்  ஸ்டாலின் உள்ள புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்பி இருந்தார். இதையடுத்து ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வத்தை போனில் அழைத்து ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 

அந்த போன் உரையாடலில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

''நான் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். உங்க கடிதத்தை படிச்சேன். நீங்க புரட்சிதலைவர் ரசிகன் சொல்லி இருக்கீங்க. நானும் எம்ஜிஆர் ரசிகன் தான். எனக்கு பாராட்டு சொல்லி இருக்கீங்க. அந்த பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கத்தான் போன்போட்டேன்'' 

-இவ்வாறு  முதல்வர் பேச, ஆச்சரியத்தில் திகைத்த ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வம் ''ரொம்ப நன்றிங்கண்ணா. நீங்களே லைன்ல வந்தது ரொம்ப சந்தோஷம். உங்க கைக்கு லெட்டர் கிடைக்காதுன்னு நினைச்சுட்டேன்'' என்று சொல்ல,

''அதெப்படி லெட்டர் கிடைக்காம போகும்?. கரெக்டா கைக்கு வந்து சேர்ந்துடுச்சி'' என்ற முதல்வர், பன்னீர்செல்வத்தின் தொழில் குறித்து விபரங்கள் கேட்டறிந்தார். 

முதல்வரின் இந்த ஆடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com