தமிழகத்தில் கோடை வெய்யில் சுட்டெரிக்கத் துவங்கி, மதுரை, ஈரோடு, வேலூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த சில வாரங்களில் அனல் காற்று மேலும் அதிகரிக்கக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்ததாவது;
தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருவதால், அங்கு குளிர்ச்சியான சூழல் மாலை நேரங்களில் நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் வெப்பநிலை அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது.
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். வட மாநிலங்களில் மும்பை, தானேவில் இன்றும் நாளையும் அனல்காற்று வீசும்.
-இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.