காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 26 வகையான மருந்துகள் தரமற்றவை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
–இதுகுறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்ததாவது:
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் போலி மருந்துகள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்து வகைகளில் 1,096 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் சர்வ சாதாரணமாக காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரணக் கோளாறு போன்றவற்றுக்கு பயன்படுத்தும் 26 வகையான மருந்துகள் தரமற்றவை என கண்டறியப் பட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலான மருந்துகள் இமாசலப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. இந்த தரமற்ற மருந்துகள் குறித்த விபரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
–இவ்வாறு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.