இன்று உலக இட்லி தினம்: இட்லியின் பூர்வீகம் எது தெரியுமா?

இன்று உலக இட்லி தினம்: இட்லியின் பூர்வீகம் எது தெரியுமா?

இன்று சர்வதேச இட்லி தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டிலி மார்ச் 30-ம் தேதி உலக இட்லி தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் காலை நேர உணவாக விரும்பி உண்ணப்படுவது இட்லிதான்! ஆனால் இந்த இட்லி முதன்முதலாக உருவானது இந்தியாவில் இல்லையாம். இட்லியின் பூர்வீகம் இந்தோனேஷியா என்று சொல்லப்படுகிறது.  சரி.. உலக இட்லி தினம் உருவானது எப்படி?!

கோவையை பூர்விகமாகக் கொண்ட இனியவன் என்பவர்தான் இட்லி தினம் கொண்டாட காரணமானவர். 'மல்லிப்பூ இட்லி' நிறுவனத்தை உருவாக்கிய இனியவன், வகைவகையான இட்லிகள் செய்து சாதனை படைத்தவர். மேலும் 124 கிலோவில் இட்லி செய்து கின்னஸ் சாதனை படைத்தவர். மேலும் இவர் 2000-க்கும் அதிக  வகைகளில் புதுப்புது தினுசுகளில் சுவைகளில் இட்லிக்களை தயாரித்துள்ளார்.

இனியவன் மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில் உலக இட்லி தினமாக மார்ச் 30-ம் தேதி கொண்டாடப் படுகிறது.

உலக உணவு வகைகளில், அதிக உட்டச்சத்து கொண்ட உணவுகளில் ஒன்றாக இட்லியை உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது. இட்லியில் புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட் என அனைத்தும் உள்ளது. இட்லி ஆவியில் வேகவைத்த உணவு என்பதால் ஆரோக்கியாமாகவும் எளிதில் ஜீரணமாக கூடிய உணவாகவும் விளங்குகிறது. அதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்ததாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இட்லி குறித்து கி.பி., 920-ம் ஆண்டிலேயே  கன்னட மொழியில் எழுதப்பட்ட 'வத்தாராதனை' என்ற நுாலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 12-ம் நூற்றாண்டில்,  குஜராத்திலிருந்து தமிழகத்திற்கு வணிகம் செய்ய வந்த துணி வியாபாரிகள்தான் தென்னிந்தியாவில் இட்லியை அறிமுகப் படுத்தியதாக சொல்லப்படுகிறது. இட்டவி (இட்டு அவி) என்பதே இட்லி என்று மாறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் சுவைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக் என்பதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com